கடந்த டிசம்பர் மாதம், இண்டிகோ விமான நிறுவனம் விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் பற்றாக்குறையினால் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால், பல இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இண்டிகோ நிறுவனத்தின் இந்தப் பிரச்னையால், பயணிகள் வேறு விமான நிறுவனங்களை நோக்கி நகர்ந்தனர்.
செக் விலக்கு…
அந்தச் சமயத்தில் விமான நிறுவனங்கள் டிக்கெட்டிற்கு அதிக கட்டணங்களை விதிக்கக்கூடாது என்று மத்திய அரசு செக் ஒன்றை வைத்தது.
அதன் படி, விமான நிறுவனங்கள் எகனாமிக் வகுப்பு ஒரு வழி பயணங்களுக்கு அதிகபட்சமாக ரூ.18,000 வரை தான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று எல்லை வகுத்திருந்தது.
மேலும், தேவைப்பட்டால் டிமாண்ட் அடிப்படையில் டிக்கெட் விலை உயர்த்தலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.
ஆனால், நாளை முதல் இந்தக் கெடுபிடிகள் விலக்கப்பட உள்ளது.
என்ன காரணம்?
இதற்கு முக்கிய காரணம், மேற்கு ஆசிய நாடுகளில் நிலவி வரும் போர் மற்றும் அதனால், ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம்.
எரிபொருள் விலையேற்றத்தை விமான நிறுவனங்கள் சமாளிக்கவே மத்திய அரசு இந்த விலக்கை அளித்துள்ளது.
ஆனால், விமான நிறுவனங்கள் டிக்கெட்டிற்கு அதிக கட்டணம் விதித்தால், மீண்டும் டிக்கெட் விலையின் எல்லை நிர்ணயிக்கப்படும் என்று செக் வைத்துள்ளது மத்திய அரசு.




