14
February, 2026

A News 365Times Venture

14
Saturday
February, 2026

A News 365Times Venture

அண்ணா அறியாலயத்தில் ஒருபக்கம் ரெய்டு; மறுப்பக்கம் கூட்டணி பேச்சு! – காங்கிரஸ் ஆடிய அரசியல் ஆடுபுலி

Date:

ஆட்சியில் பங்கு வேண்டும் என்கிற கோரிக்கையோடு, அதிமுக கூட்டணியில் பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரசும், 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சினைத் தொடங்கியுள்ளனர்.

கைகூடாத கனவு

இதே போன்று 1952, 1980, 2006, 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் கூட்டணி ஆட்சிக்கான சாத்தியக் கூறுகள் தென்பட்டன, ஆனால், கைகூடவில்லை.

தமிழ்நாட்டு அரசியலில் இந்திய விடுதலைக்குப் பின்னர் நடந்த முதல் பொதுத்தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைந்திடும் வாய்ப்பு உருவானது. 1952 இல் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு மூன்று மாத காலம் ஆட்சி அமைக்காமல் காத்திருந்தார்கள். ஒருவழியாக அரசியலே வேண்டாமென்று ஒதுங்கி இருந்த ராஜாஜி முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது 62 சட்டமன்ற உறுப்பினர்களோடு, உருவாக்கிய கூட்டணி அமைச்சரவைக் கனவு கைகூடவில்லை. தனிப்பெரும்பான்மை இல்லாமல், பிற கட்சிகள் ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. 152 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் போது 200 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருந்தது.

அப்போது, ராஜாஜி அமைத்ததும் கூட்டணி அமைச்சரவை போன்றுதான். காமன்வீல் கட்சியைக் கலைத்துவிட்டு எம்.ஏ. மாணிக்கவேல் நாயகர் நிலவருவாய் துறையின் அமைச்சரானார். அக்கட்சியின் 6 சட்டமன்ற உறுப்பினர்களும் காங்கிரஸ் உறுப்பினர்களாக மாறினர். சிறிதுகால இடைவெளிக்குப் பின்னர் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் 19 சட்டமன்ற உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சியாக மாறினார்கள், அக்கட்சித் தலைவர் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சி உள்ளாட்சித் துறை அமைச்சரானார்.

ராஜாஜி

ராஜாஜி அமைச்சரவையிலும், காமராஜர் அமைச்சரவையிலும் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாக மாறிய பின்பு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

1980 தேர்தல்

1980 சட்டமன்ற பொதுத்தேர்தலில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான ஆடுபுலி ஆட்டத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கி வைத்தது. எம்ஜிஆர் தலைமையிலான அதிமுகவோடு, இந்திய கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட், காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ், மக்கள் கட்சி, கிறிஸ்தவ ஜனநாயக முன்னணி, கவாய் குடியரசு கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை ருசித்த திமுக – காங்கிரஸ் கூட்டணி அப்படியே தொடர்ந்தது. முஸ்லீம் லீக் கட்சி, தேசிய பார்வர்ட் பிளாக், பசும்பொன் தேவர் கட்சி, உழைப்பாளர் கட்சி, சக்திதாசன் இந்தியக் குடியரசுக் கட்சி, கிறிஸ்தவ ஜனநாயக் முன்னணியின் மற்றொரு பிரிவு உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியை ஆதரித்தனர்.

திமுக 109 தொகுதிகளிலும், காங்கிரஸ் 109 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஜனதா கட்சி 95 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது. சமபலத்தோடு போட்டியிட்ட திமுக கூட்டணியில் யார் முதலமைச்சர் என்று பேச்சு எழுந்தது. திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த எம்.பி.சுப்பிரமணியம் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தார். திமுக, காங்கிரஸ் எந்தக் கட்சி அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறுகிறார்களோ, அந்தக் கட்சிக்கு முதல்வர் பதவி என்று காங்கிரஸ் தலைவர்கள் பேசத் தொடங்கினர்.

`கருணாநிதி தான் முதலமைச்சர்’ – அறிவித்த இந்திரா

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பார்வையாளர்களான ஆர்.வெங்கட்ராமன், ராம் கோபால் ரெட்டி போன்றவர்களும், ”தேர்தலுக்குப் பின்னர் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வோம்” என்றார்கள். இதற்கிடையே, திமுகவின் வேண்டுகோளை ஏற்ற இந்திரா காந்தி, தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் கருணாநிதி தான் முதலமைச்சர் என்று அறிவித்தார். ஆனால், அமைச்சரவையில் காங்கிரஸ் பங்களிப்பது பற்றி, வெளிப்படையாக எதுவும் கூறவில்லை.

1980 மே 28 முதல் மே 31 வரை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் ஜூன் 1 அன்று அதிமுகவுக்கு சாதகமான முடிவுகளைத் தந்தது. ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் வென்று, மீண்டும் எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனார். 128 இடங்களில் வென்ற அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றது. திமுக 38, காங்கிரஸ் 30 இடங்களில் மட்டுமே வென்றனர். தமிழக அரசியலில் இந்த முறையும் கூட்டணி ஆட்சி அமைத்திடும் கனவு கைவிட்டுப் போனது.

கருணாநிதி – அண்ணா

மைனாரிட்டி திமுக ஆட்சி

2006 ஆம் ஆண்டில், திமுக ஆட்சி அமைத்தாலும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. திமுகவின் 96 உறுப்பினர்களோடு, காங்கிரஸ், பாமக ஆதரவு கிடைத்ததால் ஐந்தாண்டு காலம் திமுகவால் ஆட்சியை நடத்த முடிந்தது. இந்த காலகட்டத்தில்தான் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி என்று ஜெயலலிதா விமர்சனம் செய்து வந்தார்.

2006 – 2011 ஐந்தாண்டு கால திமுக ஆட்சியின் போது, அவ்வப்போது அமைச்சரவையில் பங்கு வேண்டுமென காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் குரல் எழுப்பி வந்தனர். 2011 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் போது, ஆட்சியில் பங்கு வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்களின் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோட்டில், “காங்கிரஸ் எந்தக் கூட்டணியில் சேர்ந்தாலும் ஆட்சியில் பங்கு பெறுவோம், முதன்மையான இடத்தில் இருப்போம்” என்று வெளிப்படையாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மத்திய அரசின் அமைச்சரவையில் திமுக எம்பிக்கள் அமைச்சர்களாக இருந்தனர். அதனால், திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியான நிலையில்தான் இருந்தது.

திமுகவோடு கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக காங்கிரஸ் கட்சியில், மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், கே.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது.

திமுகவின் சார்பாக, அன்றைய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு ஆகியோரைக் கொண்ட பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது.

அதிக தொகுதிகள் கேட்க வேண்டும், ஆட்சியில் பங்குபெற வேண்டுமென காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, 2011 பிப்ரவரி 20 ஞாயிறு அன்று மாலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். ஆனால் ஆட்சியில் பங்கு என்பதை திமுக ஏற்றுக்கொள்ளவில்லை. `கூடுதல் தொகுதிகள் பற்றி பேச்சுவார்த்தையைத் தொடரலாம்’ என்றனர்.

தொகுதிப் பங்கீட்டு குழுவினர் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை முடிவுகளை விளக்கிச் சொன்னார்கள். காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு திமுக ஆட்சியில் பங்கு வேண்டுமென காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் விரும்புவதாகச் சொன்னார்.

கே.வி.தங்கபாலு

காங்கிரஸின் ஆடுபுலி ஆட்டம்!

திமுகவோ கடந்த 2006 தேர்தலில் 132 இடங்களில் போட்டியிட்டு, 96 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. அதனால் பெரும்பான்மை இடங்களான 117 கூட கிடைக்கவில்லை. அப்படியொரு சூழ்நிலை வந்துவிடக் கூடாது. அதனால், 2011 தேர்தலில் 180 தொகுதிகளில் போட்டியிடவேண்டுமென்று விரும்பினார்கள். திமுக கூட்டணியில் முதல் ஆளாக இணைந்திருந்த பாமக 31 தொகுதிகளில் போட்டியிட ஒப்பந்தம் போட்டிருந்தது. மீதமுள்ள 203 தொகுதிகளில் பிற கட்சிகளுக்கும் பங்களிப்பு செய்ய வேண்டும்.

கூட்டணிப் பேச்சுவார்த்தை டெல்லியிலும் மறைமுகமாகத் தொடர்ந்தது, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி, டெல்லியில் 2011 மார்ச் 8 அன்று செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது, ஆட்சியில் பங்கு குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரவை தொடர்பாக தமிழகத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் திமுகவோடு முடிவெடுப்போம் என்றும் கூறினார்.

சிபிஐ

ஆனால், 2011 மார்ச் 11 அன்று திடீர் திருப்பமாக தமிழக அரசியலில் தேசியக் கட்சியான காங்கிரஸ் ஓர் ஆடுபுலி ஆட்டத்தை அரங்கேற்றியது.

பிப்ரவரி 18 அன்று கலைஞர் டிவி அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பிப்ரவரி 20 அன்று திமுக – காங்கிரஸ் பேச்சுவார்த்தை தொடங்கியது.

அதே போல மார்ச் 11 அன்று திமுக காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, சிபிஐ விசாரணை அதிகாரிகள் அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருந்தனர்.

திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நான்காவது நாள் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளோடு கருணாநிதி நேர்காணல் செய்து கொண்டிருந்தார்.

மற்றொரு பகுதியில் திமுக – காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழுவினர் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர்.

அதே, அண்ணா அறிவாலயத்தில் அமைந்திருக்கும் கலைஞர் டிவி அலுவலகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி காலை 10.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து கலைஞர் டிவி இயக்குநர்களான அமிர்தம், தயாளு அம்மாள் ஆகியோரும் வந்தடைந்தனர். சிறிது நேரத்தில் 10.45 மணிக்கு டி.எஸ்.பி. , பெண் அதிகாரிகள் உள்ளிட்ட சிபிஐ அதிகாரிகள் குழு அண்ணா அறிவாலயம் வந்தனர்.

மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் அண்ணா அறிவாலயத்தின் பேராசிரியர் ஆய்வு நூலகத்தில் வைத்து தயாளு அம்மாளிடம் விசாரணை நடத்தினர்.

திமுக - காங்கிரஸ்
திமுக – காங்கிரஸ்

தொலைக்காட்சி அலுவலகத்தில் கனிமொழியிடம் விசாரணை நடத்தப்பட்டது. மூன்று மணி நேரமாக இந்த விசாரணை தொடர்ந்தது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் ஒரு பகுதியில் வேட்பாளர் நேர்காணல், இன்னொரு பகுதியில் திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை, மற்றொரு பகுதியில் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளின் விசாரணை என்று அறிவாலயமே தலைப்புச் செய்தியாக மாறியிருந்தது.

திமுக காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் பிரதிநிதியாக ப.சிதம்பரம் இருந்தார். உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் தலைமையின் கீழ் செயல்படும் சிபிஐ அதிகாரிகள் இன்னொரு அறையில் திமுக தலைவரின் மனைவி மற்றும் மகளிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.

விசாரணை முடிந்து சிபிஐ அதிகாரிகள் வெளியேறிய பின்னர் அறிவாயலம் தனது இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் போட்டியிட உள்ளதாக அறிவித்தனர். 60 முதல் 80 தொகுதிகள் வரை கேட்ட காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்கள் கிடைத்தது என்றனர். ஆட்சியில் பங்கு குறித்து காங்கிரஸ் கட்சி அதன்பிறகு பேசவில்லை.

எடுபடாத வாதம் – ஆட்சியில் பங்கு!

ஆனால், 2011 ஏப்ரல் 1 அன்று சேலத்தில் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு பேசும்போது, “திமுக தலைவர் கருணாநிதி முதல்வர் ஆவதுதான் எங்களது இலக்கு, ஆட்சியில் பங்கு பெறுவது குறித்து, தேர்தல் முடிந்தவுடன் பேசுவோம்” என்று கூறினார்.

ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடைந்தது. அதிமுக கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. அதிமுக அணியில் அதிக இடங்களைப் பிடித்த தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஆட்சியில் பங்குபெறும் எண்ணம் இல்லையென்று அறிவித்தார். அதிமுக ஆளுங்கட்சியாகவும், தேமுதிக எதிர்கட்சியாகவும் செயல்பட்டனர். இந்த முறையும் தமிழக அரசியல் வரலாற்றில் கூட்டணி அமைச்சரவைக் கனவு கைகூடவில்லை.!

இம்முறை கைகூடுமா என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்.!

(ஆடுபுலி ஆட்டம் தொடரும்)

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`தஞ்சாவூர் தொகுதி உனக்கு தான்' திமுக மாவட்ட செயலாளரின் வாக்குறுதி; குழப்பத்தில் நிர்வாகிகள்!

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள...

ஏழைகளின் இறைச்சி முதல் தீபாவளி பருப்பு வரை! – புவிசார் குறியீடு பெற்ற இந்தியாவின் டாப் 6 பருப்புகள்

உணவுப் பயிர்கள், கைவினைப் பொருள்கள், உணவுப் பொருள்கள், பாரம்பர்ய தயாரிப்புகள், தோட்டப்பயிர்கள்,...

`அமித் ஷா உள்ளிட்டோர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வர வேண்டும்; அப்படி வந்தால்தான்…' – அன்பில் மகேஸ்

திருச்சி, திருவெறும்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது...

'புதுச்சேரி நிதியில் ரூ.15,000 கோடி ஊழல் செய்தவர் நாராயணசாமி!' – காரைக்காலில் கடுகடுத்த அமித் ஷா

``தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு மன்னிப்பு  கேட்கிறேன்...”புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில்...