தவெக தலைவர் விஜய் திடீரென இன்று அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்துள்ளார். விஜய்யின் திடீர் திருச்செந்தூர் விசிட்டுக்குக் காரணம் என்ன? ரிசல்ட்டுக்கு முன்பாக அவரின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன? விஜய்க்கு நெருக்கமான சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்.
ரிசல்ட்டை எதிர்நோக்கி விஜய்யும் அவருக்கு நெருக்கமானவர்களும் நல்ல பாசிட்டிவான மனநிலையில் இருப்பதாகக் கூறும் தவெகவின் சீனியர்கள், ”வாக்குப்பதிவு நடந்த மறுநாளே பட்டினம்பாக்கம் இல்லத்தில் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், என். ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி போன்ற முக்கியஸ்தர்களைச் சந்தித்து விஜய் பேசியிருந்தார்.
அந்தச் சந்திப்பில் வாக்கு சதவீதம் முன்பை விட அதிகரித்தது குறித்தும் வாக்களித்துவிட்டு வந்தவர்கள் உற்சாகமாகப் பகிர்ந்து கொண்ட கருத்துகளையும் விஜய்யிடம் கூறியிருக்கின்றனர். அதைக் கேட்ட விஜய்யும் ரொம்பவே ஹேப்பி. அடுத்த மாதம் தவெகவின் ஆட்சி முழு மெஜாரிட்டியோடு அமையும் அல்லது நம்முடைய ஆதரவு இல்லாமல் இங்கே ஒரு ஆட்சி அமையாது எனுமளவுக்கு வியூகப்புள்ளி விஜய்க்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.
ரிசல்ட்டுக்குப் பிறகு தவெக சார்பில் வெல்லும் நபர்களை திமுகவும் அதிமுகவும் இழுக்க முயற்சிக்கலாம். ஏற்கனவே எடப்பாடியில் வேட்புமனுவின் போதே அதே வேலையைச் செய்தார்கள்.

ரிசல்ட்டின் போது அந்த மாதிரி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, வேட்பாளர்கள் அத்தனைப் பேரையும் சென்னைக்கு அழைத்து ஒரு ஆலோசனைக்கூட்டம் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் ரிசல்ட்டின்போது கடைபிடிக்க வேண்டிய முக்கியமான அறிவுரைகள் சிலவற்றை வழங்கவும் திட்டமிட்டிருக்கின்றனர்” என்றனர்.
வேட்பாளர்களுடனான அந்தக் கூட்டத்தை வரும் 30 ஆம் தேதி நடத்த பனையூரின் முக்கிய நிர்வாகிகள் தயாராகி வருவதாகக் கிசுகிசுக்கின்றனர்.
இந்நிலையில்தான் சூழ்ந்திருக்கும் தடைகள் எல்லாம் விலகவும் எதிரிகளின் சூழ்ச்சிகள் உடைபடவும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்று அதிகாலை விஸ்வரூப தரிசனம் செய்யுமாறு விஜய்யிடம் அவரின் ஆஸ்தான ஜோதிடர் அறிவுறுத்தியதாகக் கூறுகின்றனர். இதைத்தொடர்ந்து ஆனந்த் நேற்று மதியமே திருச்செந்தூருக்குச் சென்று விஜய்யின் வழிபாட்டுக்கான ஏற்பாடுகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்.
விஜய் நள்ளிரவு 11:30 மணிக்கு மேல் நீலாங்கரை வீட்டிலிருந்து கிளம்பி தனி விமானம் மூலம் நள்ளிரவு 2 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்து சேர்ந்திருக்கிறார். அங்கிருந்து காவல்துறை பாதுகாப்போடு திருச்செந்தூர் முருகர் கோவிலுக்குச் சென்றவர், சிறப்பு தரிசனத்தை முடித்துவிட்டு செண்டிமெண்ட்டாக ஒன்றிரண்டு மணி நேரங்களுக்கு திருச்செந்தூரிலேயே தங்கிவிட்டு மீண்டும் சென்னை கிளம்பியிருக்கிறார்.

‘தலைவரைப் பார்க்க லோக்கல் மாவட்டச் செயலாளர்களோ நிர்வாகிகளோ கோவிலுக்கு வரக்கூடாது’ எனக் கண்டிப்பாக கூறியிருக்கிறார் ஆனந்த். ஆனால், கோவிலுக்குள் விஜய் செல்கையில் ஆனந்துக்கு நெருக்கமான மா.செக்கள் சிலர் உடனிருந்ததால் மற்ற நிர்வாகிகளெல்லாம் கடும் அப்செட். ‘தளபதி பிரஷர் எதுவும் இல்லாம ப்ரீயா நம்ம ஊருக்கு வராரு. அப்பக்கூட நம்மல நெருங்கவிட மாட்றாங்களே’ என வருந்துகின்றனர்.
மேலும், ஜோதிடரின் அறிவுத்தல்படி ரிசல்ட்டுக்கு முன்பாக விஜய் வேறு சில ஆன்மிகத்தலங்களுக்கும் சென்று வழிபடக்கூடும் என்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.




