தவெக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. திரண்டிருந்த பெண் நிர்வாகிகள் மத்தியில் விஜய் உரை ஆற்றினார்.
விஜய் பேசியதாவது, “நெஞ்சில் குடியிருக்கும் சிங்கப்பெண்கள் அத்தனை பேருக்கும் மகளிர் தின வாழ்த்துகள். ஒரு ஊரில் ஒரு பெரிய கோயில் யானை இருந்தது. அது உஷாரான யானை. யாராலும் ஏமாற்ற முடியாது. ஆனால், ஒரு ஜகஜால கில்லாடி அந்த யானையை ஏமாற்றிவிட்டார்.
எப்படி என்றால் தேங்காய் முடிக்குள் சுண்ணாம்பை வைத்துக் கொடுத்திருக்கிறார். அந்த யானையும் சாப்பிட்டுவிட்டது. ‘ஏமாத்துறதெல்லாம் தொழில் ரகசியம்’ என அந்த ஆள் தன் நண்பனிடம் பெருமை பேசியிருக்கிறார். கொஞ்ச நாட்கள் கழித்து அந்த நண்பர்கள் மீண்டும் சந்தித்திருக்கிறார்கள்.
‘ஒரு வேளை அந்த யானை முதல் தடவை என்பதால் தெரியாமல் ஏமாந்திருக்கும்’ என்று நண்பன் சொல்ல, ‘நான் மீண்டும் ஏமாற்றி காட்டுகிறேன்’ என அந்த ஜகஜால கில்லாடி சொல்கிறான். வாழைப் பழத்தை வாங்கி அதில் பஞ்சைத் திணித்து யானைக்கு மீண்டும் கொடுக்கிறான். இப்போது யானை தும்பிக்கையைச் சுழற்றி அவனை வீசி எறிகிறது. அந்த யானைதான் நாம்.
பெண்களுக்காக தவெகவின் சில முக்கிய அறிவிப்புகள்:
பெண்கள், குழந்தைகள், முதியோருக்கான தனி இலாகா அமைக்கப்படும். அது என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும்.
மதிப்புமிகு மகளிர் திட்டம் – மகளிர் உரிமைத் தொகை வெறும் 1000 ரூபாய் மட்டுமே கொடுக்கப்படுகிறது. நம்முடைய அரசில் 60 வயது வரையுள்ள மகளிருக்கு மாதாமாதம் 2500 ரூபாய் வழங்கப்படும். மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு விதி விலக்கு.
அன்னப்பூரணி சூப்பர் சிக்ஸ் – வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
அண்ணன் சீர் – பெண்களின் திருமணத்துக்குத் தரமான பட்டுப் புடவையும் ஒரு பவுன் தங்கமும் வழங்கப்படும்.
காமராஜர் கல்வி உறுதித் திட்டம் – மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க தாய் அல்லது பாதுகாவலருக்கு 15,000 ரூபாய் உதவித்தொகை

வெற்றிப் பயணம் திட்டம் – அரசுப் போக்குவரத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம்.
ராணி வேலுநாச்சியர் படை – பெண்கள் பாதுகாப்புக்கு ராணி வேலுநாச்சியார் படை. சாதாரண உடையில் கேமராக்களுடன் பெண்கள் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள்.
அஞ்சலையம்மாள் அதிவிரைவு நீதிமன்றங்கள் – பெண்களுக்கு Import குற்றங்களை விரைந்து விசாரிக்க தனி நீதிமன்றம்.
ரேஷன் கடைகளில் பள்ளிகளில் இலவச நாப்கின்கள் திட்டம்.
சுய உதவிக்குழுக்களில் பதிவு செய்து MSME நிறுவனங்களாக மாறுவோருக்கு ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படும்.
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் – தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரமும் பேபி கிட்டும் வழங்கப்படும்.
சமீபமாக நிறைய பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதற்காக நீங்கள் வருந்துவதைப் பார்க்க முடிகிறது. அதைப் பார்த்து எனக்கு வருத்தமாக இருக்கிறது. அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நாம் எல்லாரும் சேர்ந்து மக்கள் பிரச்னைகளைப் பார்ப்போம். அவ்வளவு எல்லாம் வருத்தப்படாதீர்கள். அது வொர்த் இல்லை.




