தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், முகூர்த்த நாளான இன்று பெரம்பூர் தொகுதியில் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி தேர்தல் வேலைகளை தொடங்கியிருக்கிறது தவெக. இந்தக் கூட்டத்தில் பேசிய சில நிர்வாகிகள் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதை சூசகமாக உறுதிப்படுத்தி பேசியிருந்தனர்.
பெரம்பூர் தொகுதியின் மாவட்டச் செயலாளரான சிவா பேசுகையில், ‘தலைவருக்கு மிகவும் பிடித்த தொகுதியாக பெரம்பூர் தொகுதியை மாற்றிவிட்டேன்.
ஓராண்டில் 44000 பேரை தொகுதிக்குள் கட்சியின் உறுப்பினர்களாக சேர்த்திருக்கிறேன்.
இன்னும் 35 நாட்கள்தான் இருக்கிறது. ஒரு நாளும் தூங்காமல் உழைத்து தளபதியை வெல்ல வைத்து முதல்வராக்க வேண்டும்’ என்றார்.
சமீபத்தில் தவெகவில் இணைந்த அதிமுகவின் முன்னாள் மா.செ வி.எஸ் பாபு பேசுகையில், ‘முதலமைச்சரை தேர்ந்தெடுக்கப் போகும் தொகுதி பெரம்பூர்தான்.
இந்தத் தொகுதியிலிருந்துதான் முதல்வர் வரப்போகிறார்.
திமுக, அதிமுகவில் வட்டச் செயலாளர் பதவி வாங்கவே 25 வருடம் குடும்பத்தை விட்டு விட்டு சாக வேண்டும். ஆனால், தவெகவில்தான் ஒரு ஆட்டோ ஓட்டுநர் கூட மாவட்டச் செயலாளர் ஆக முடியும்.

திமுக, அதிமுகவினர் என்ன செய்வார்கள் என எனக்கு தெரியும். பொதுச்செயலாளர் மட்டும் உத்தரவிட்டால் நான் அத்தனை பேரையும் ஓட விட்டு விடுவேன். திரு.வி.க நகர், துறைமுகம், பெரம்பூர் தொகுதியெல்லாம் தவெகவுக்குதான். தலைவரை மட்டும் ஒரு நான்கைந்து முறை தொகுதிக்கு பிரசாரத்துக்கு அழைத்து வந்து விடுங்கள்’ என்றார்.

‘பெரம்பூர் தொகுதியில் எதிர்த்து நிற்பவர்கள் அத்தனை பேரும் டெபாசிட் இழப்பார்கள்’ என்றார் செங்கோட்டையன்




