‘தவெக பத்திரிகையாளர் சந்திப்பு!’
வக்ஃப் திருத்த மசோதா தொடர்பாகவும், தமிழக வெற்றிக்கழகம் தொடந்திருக்கும் வழக்கு தொடர்பாகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் CTR நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்திருந்தார்.
‘திமுக மீது விமர்சனம்!’
அப்போது பேசிய அவர், ‘தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடராமல் இருப்பது ஏன்? கேரளா அரசு சார்பில் CAA வை எதிர்த்து வழக்கு தொடர்ந்து உள்ளனர். ஆட்சி மாறினாலும் அரசு தொடர்ந்துள்ள வழக்கில் இதுகுறித்து வாதிடலாம் என்று அவர்கள் பதிவு செய்தனர்.
அதேபோல வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடராமல் இருப்பது ஏன்? வெறுமென தீர்மானத்தை மட்டும் இயற்றி பெட்டிக்குள் பூட்டி வைத்திருக்கின்றனர். அதனால் என்ன பயன்? ஆளுநரை காட்டி காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள். சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானத்தை கொண்டு சென்று அரசு சார்பில் வழக்குப் பதிவு செய்திருக்கலாம். ஆனால் இவர்கள் வெறும் கண் துடைப்பு நாடகத்தைத்தான் செய்கிறார்கள்.

திமுக எப்போதுமே தங்களுக்கு லாபம் இருந்தால் மட்டும்தான் ஒரு விஷயத்தில் கை வைக்கும். வக்ஃப் விஷயத்தில் திமுக அரசு ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. தமிழக மக்களுக்கு இன்னொரு துரோகத்தை நிகழ்த்திவிட்டது.
மேலும் தமிழகத்தில் வக்ஃப் நிலத்தை சில தனி நபர்கள் மற்றும் அமைப்பினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது எனவே வக்ஃப் நிலம் குறித்து வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.’ என்றார்.

‘பாஜகவுடன் கூட்டணியா?’
மேற்கொண்டு, பாஜகவுடன் கூட்டணி வைக்கும் முடிவில் தவெக இருக்கிறதா எனும் கேள்விக்கு, ‘கூட்டணியை பற்றி பேச இன்னும் காலமிருக்கிறது. மக்கள் நலனுக்காக எந்த எல்லை வரையும் செல்வோம் என தலைவர் சொன்னது மக்கள் நலன் சார்ந்து போராட்டங்கள் பற்றியதுதான்.

அதிமுகவை விமர்சிக்கவில்லை என கேட்கிறீர்கள். தேவை ஏற்படும்போதுதான் ஒரு கட்சியை விமர்சிக்க முடியும். மாநாட்டிலேயே எங்களின் அரசியல் எதிரி யார் கொள்கை எதிரி யார் என்பதை அறிவித்துவிட்டோம். பாஜகவுடன் 100% கூட்டணி இல்லை. கூட்டணி குறித்து எங்களின் தலைவர் விஜய்தான் அறிவிப்பார்.’ என்றார்.




