அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எப்போது என்ன அறிவிப்பாரோ என்ற பீதியில் தான் உலக நாடுகள் இருக்கின்றன என்று கூட கூறலாம்.
அவர் அதிபராக பதவியேற்றதில் இருந்து வரிசையாக அறிவிப்புகளை அறிவித்து கொண்டே வருகிறார். அவற்றை அறிவிப்புகள் என்று சொல்லாமல், அதிர்ச்சிகள் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு அவரின் அறிவிப்புகள் அமெரிக்காவை மட்டுமல்ல… உலக நாடுகள் அனைத்தையுமே ஏதோ ஒருவிதத்தில் பாதித்துகொண்டே தான் இருக்கின்றன.
அந்த வகையில், ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் அறிவிப்பு, ‘ஒன் பிக் பியூட்டிஃபுல் பில் ஆக்ட்’.
ஆஹா… பெயரிலேயே ‘பியூட்டிஃபுல்’ இருக்கிறது என்று மகிழ்ச்சி அடையாதீர்கள். இதில் இந்தியர்களுக்கு கொஞ்சம் ஆபத்தும் இருக்கிறது.
முதலில், அந்த சட்டத்தில் முக்கிய அம்சங்கள் என்னென்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வோம்…
> 30,000 – 80,000 டாலர்கள் சம்பாதிக்கும் அமெரிக்கர்களுக்கு அவர்கள் கட்டும் வரியில் இருந்து கிட்டதட்ட 15 சதவிகிதம் விலக்கு அளிக்கப்படுகிறது.
> டிப்ஸ் மற்றும் ஓவர் டைம் மூலம் சம்பாதிக்கும் பணங்களுக்கு இனி வரி கிடையாது.
> வரி கட்டும் மக்களின் நிதியில் இருந்து அளிக்கப்படும் மருத்துவ உதவிகள் இனி சட்ட விரோதமாக குடியேறிய மக்களுக்கு கிடைக்காது.
> இனி அமெரிக்கா குடியுரிமை வைத்திருக்கும் மக்கள் மற்றும் அமெரிக்க மக்கள் அமெரிக்காவை தாண்டி வேறு நாடுகளுக்கு தங்களது பணத்தை அனுப்பினால், அவர்கள் அந்தப் பணத்திற்கான 5 சதவிகித வரியை தங்களது வங்கிக்கு செலுத்த வேண்டும். அந்த வங்கி காலாண்டிற்கு ஒருமுறை இந்த வரி பணத்தை அமெரிக்க கருவூலத்திற்கு செலுத்தும்.
இந்த அறிவிப்புகளின் லட்சியம் என்ன?
அமெரிக்க மக்களுக்கு வரி சலுகை வழங்குவது,
அமெரிக்க அரசின் செலவுகளை குறைப்பது,
எல்லை பாதுகாப்பை உறுதி செய்வது
ஆகியவை இந்த அறிவிப்புகளின் லட்சியம் ஆகும்.
இது இந்தியாவை எப்படி பாதிக்கும்?
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்தியாவிற்கு பணம் அனுப்பப்படும் கணக்கெடுப்பில், அமெரிக்கா தான் முதல் இடம் பிடித்துள்ளது. அதாவது, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பப்படும் பணத்தில் 27.7 சதவிகிதம் அமெரிக்காவில் இருந்து தான் வருகிறது.
அமெரிக்க குடியுரிமை பெற்ற மக்கள் இந்தியாவில் இருக்கும் எதாவது நிறுவனங்களுக்கு பணம் அனுப்பினால், அதற்கென தனி வரி உண்டு. ஆனால், வணிக ரீதி அல்லாத பண பரிமாற்றங்களுக்கு இதுவரை வரி இருந்ததில்லை.

இப்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் அறிவிப்புகள் மூலம் பெற்றோர், உறவினர், நண்பர் என யாருக்கு பணம் அனுப்பினாலும், அந்தப் பணத்திற்கான 5 சதவிகித வரியை கட்ட வேண்டும்.
வணிக ரீதியாக அல்லாமல் பணம் அனுப்புகிறார்கள் என்றால் குடும்பத் தேவை, உதவி போன்றவற்றிற்கு தான் பணம் அனுப்புவார்கள். இந்த வரி விதிப்பு அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.
இந்த அறிவிப்பில் இருக்கும் ஒரே ஆறுதல், இந்த வரி விதிப்பு அமெரிக்கா குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டும் தான் என்பதே.
நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
கிரீன் கார்டு போன்ற அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களுக்கு தான் இந்த வரி விதிக்கப்படும். அதனால், அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கி அல்லது அங்கு குடியுரிமை இல்லாமல் பணி சென்று வீட்டிற்கு சம்பளம் பணம் அனுப்பவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது.
அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் இந்தியாவிற்கு பணம் அனுப்புவது மிக குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளது. அதனால், இந்தியாவிற்கு பெரிதாக எந்தப் பாதிப்பும் இல்லை.