கென்யாவில் இயங்கி வரும் இந்தியாவின் டாடா கெமிக்கல்ஸ் (Tata Chemicals) நிறுவனம் தனது அனைத்து செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ உத்தரவிட்டுள்ளார்.
தெற்கு கென்யாவின் காஜியாடோ (Kajiado) மாவட்டத்திற்கு உட்பட்ட மகாடி பகுதிக்குச் சென்ற அதிபர் ரூட்டோ, பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, “ டாடா நிறுவனம் சுமார் 100 ஆண்டுகால ஒப்பந்தத்தைக் கொண்டிருந்தது. ஆனால், காஜியாடோ பகுதியில் அவர்கள் எந்த ஒரு தொழிற்சாலையையோ வளர்ச்சித் திட்டங்களையோ கட்டமைக்கவில்லை.
நாம் மற்றவர்களுக்கு அடிமைகளா? எனவே, டாடா கெமிக்கல்ஸ் (Tata Chemicals) நிறுவனம் தனது அனைத்து செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும். அந்த நிறுவனத்திற்குப் பதிலாக இரண்டு புதிய நிறுவனங்களைக் கொண்டுவர முடிவு செய்துள்ளோம். ஒரு நிறுவனம் இங்குப் பெரிய கண்ணாடி உற்பத்தி ஆலையையும், மற்றொரு நிறுவனம் இரசாயனத் தொழிற்சாலையையும் அமைக்கும்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து கென்யாவில் இயங்கும் டாடா கெமிக்கல்ஸ் வெளியிட்ட அறிக்கையில், “கென்ய அரசின் அதிகாரத்திற்கு மதிப்பளிக்கிறோம். சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்குமுறை வழிகள் மூலம் இப்பிரச்னைக்குத் தீர்வு காணத் தயாராக இருக்கிறோம். அரசு தரப்பில் கேட்கப்பட்ட அனைத்து ஒழுங்குமுறை விதிகளுக்கும் முறையான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள், மகாடி பகுதி மக்களின் நலன் மற்றும் கென்யாவின் பொருளாதார வளர்ச்சியே தங்களின் முக்கிய முன்னுரிமை.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
கடந்த ஜூலை மாத இறுதியில், டாடா குழுமத்தின் மகாடி சோடா தொழிற்சாலையின் செயல்பாடுகளையும், சோடா ஆஷ் (Soda Ash) ஏற்றுமதியையும் நிறுத்துமாறு கென்ய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடதக்கது.
உள்நாட்டு வணிகர்களைப் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கும் கென்யா அரசு, வெளிநாட்டினர் சிறுவணிகம் செய்யவும் தடை விதித்திருக்கிறது. அதற்கான அனைத்து சட்டப் பாதைகளையும் அடைக்கும் வகையில் சட்ட மசோதாவும் கென்யா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், “வெளிநாட்டு முதலீடுகள் நாட்டின் மூலதனத்தை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதாரத்தை உயர்த்தவுமே பயன்படுத்தப்பட வேண்டும்’ எனவும் கென்ய அதிபர் வலியுறுத்தியுள்ளார்.




