ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைனில் 30 நாள்கள் போர் நிறுத்தம் அறிவிப்பதற்கான அமெரிக்காவின் திட்டம் குறித்து முதன்முறையாகப் பேசியுள்ளார்.
கடந்த வியாழன் அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற நாட்டுத் தலைவர்கள் தங்களது பல கடமைகளுக்கு மத்தியில் உக்ரைன் பிரச்னையை கவனிப்பதற்காக நன்றி தெரிவித்தார்.
Russia அதிபர் பேசியதென்ன?
“முதலில் நான் நன்றியுணர்வை வெளிப்படுத்துவதுடன் தொடங்க விரும்புகிறேன். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உக்ரைனுக்கு அதிக கவனம் செலுத்துவதற்காக நன்றி கூறுகிறேன். நம் அனைவருக்கும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஆனால் பல நாட்டுத் தலைவர்கள் சீன குடியரசின் தலைவர், இந்தியாவின் பிரதமர், பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஜனாதிபதிகள் இந்தப் பிரச்னைக்காக அதிக நேரம் செலவழித்துள்ளனர். அவர்கள் பகையும் மனித உயிரிழப்புகளையும் தடுக்கும் உன்னத நோக்கோடு இதில் தலையிடுவதனால் நாங்கள் நன்றிக்கடனுடன் இருக்கிறோம்.” எனப் பேசியுள்ளார்.
இந்தியாவின் நிலைப்பாடு
கடந்த மாதம் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரைச் சந்தித்த மோடி, உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் இந்தியா நடுநிலைமையைப் பின்பற்றவில்லை என வலியுறுத்தியுள்ளார். “இந்தியா நடுநிலைமையில் இல்லை, இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது. நான் ஏற்கெனவே அதிபர் ட்ரம்ப்பிடம் இது போருக்கான காலம் இல்லை என்பதை வலியுறுத்தியுள்ளேன். நான் அதிபர் ட்ரம்ப் எடுக்கும் முயற்சிகளை ஆதரிக்கிறேன்” என அமெரிக்காவில் பேசினார் மோடி.
ரஷ்யா – உக்ரைன் போர் ஆரம்பித்தது முதல் பிரதமர் மோடி பலமுறை இரு நாட்டுத் தலைவர்களிடம் பேசியுள்ளார். “இது போருக்கான காலம் அல்ல… ராஜாந்திர உரையாடல்களுக்கான காலம்” என்றும் வலியுறுத்தி வருகிறார்.
போர் நிறுத்தம்!
ரஷ்யா எந்த நிபந்தனைகளும் விதிக்காமல் 30 நாள்கள் போர் நிறுத்தத்தை ஏற்க வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
ட்ரம்ப் முன்மொழிந்துள்ள போர் நிறுத்தத்தை ஆதரிப்பதாக புதின் கூறினாலும், இதில் சில ‘நுணுக்கங்கள்’ உள்ளதாகவும், இது எவ்வாறு செயல்படும் என்பதில் தனக்குச் சில ‘கேள்விகள்’ உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மறுபக்கம் உக்ரைன் அமெரிக்கா முன்மொழியும் போர் நிறுத்தத்தை ஏற்பதாக அறிவித்துள்ளது.