தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஃபீவர் அனலடிக்கத் தொடங்கியிருக்கும் இச்சூழலில், நாம் தமிழர் கட்சி தேர்தல் பணிகளில் பல்வேறு குழப்பங்கள் தலையெடுக்கின்றன. கட்சிக் கட்டமைப்பு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அணுகுமுறை, வேட்பாளர்கள் தேர்வு மற்றும் அரசியல் நகர்வுகள் உள்ளிட்டவற்றில் நா.த.க-வின் வியூகம் மற்றும் அதிலுள்ள சவால்கள் குறித்து களமிறங்கி விசாரித்தோம்.
நாம் தமிழர் கட்சியின்மீதும் தலைமையின்மீதும் பல்வேறு புகார்களை அடுக்கிவிட்டு நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் விலகுவதும், ஒதுங்கிக் கொள்வதும் நாம் தமிழர் கட்சியில் மிகச் சாதாரணமாகிவிட்டது. கட்சியின் கிளைச் செயலாளர் தொடங்கி கட்சியின் முக்கிய முகமான காளியம்மாள் வரை சமீப நாட்களில் வெளியேறிவிட்டனர். இந்த பாதிப்புகளிலிருந்து கட்சியை மீட்டு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் சீமான்.
கட்டமைப்பு திட்டம்
கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக, 100 பூத்துக்கு ஒருவர் விகிதம் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு மூன்று பொறுப்பாளர்களை நியமித்து, ஒரு பூத்துக்கு 8 ஆக்டிவ் அரசியல் செய்வோரை நியமிப்பதை இலக்காக கொண்டிருக்கிறது நாம் தமிழர் கட்சி. இந்த கட்டமைப்பை நடைமுறைப்படுத்திவிட்டால் எளிதாக இரட்டை இலக்க வாக்கு சதவிகிதத்தை பெற்றுவிடலாம் என கருதுகிறார்கள்.
இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக சொல்கிறார்கள் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சிலர். நம்மிடம் பேசியவர்கள், “இரண்டு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு பொறுப்பாளர் என்றிருந்த கட்டமைப்பை, ஒரு தொகுதிக்கு மூன்று பொறுப்பாளர் என மாற்றியிருப்பது பல்வேறு நிர்வாகிகள் மத்தியில் சோர்வையே தந்திருக்கிறது.

`நிர்வாக வசதி` என காரணம் சொன்னாலும் தங்களுக்கான அதிகாரம் குறைக்கப்படுவதாக வருந்துகிறார்கள் சீனியர் நிர்வாகிகள். நிறைய பேர் கட்சியைவிட்டுச் செல்வதால் கட்சியினருக்கு அடையாளம் கிடைத்துவிடக் கூடாதென்ற நோக்கில் பொறுப்பாளர் எண்ணிக்கையை கட்சி அதிகப்படுத்துகிறதா.. என சந்தேகப் பார்வையும் துளிர்க்கிறது. அதேபோல் ஒரு தொகுதிக்கு மூன்று தொகுதிச் பொறுப்பாளர்களை நியமிப்பதால் உட்கட்சி முரணும் கூடவே கிளம்புகிறது. இவற்றை சிக்கலின்றி நடைமுறைப்படுத்துவதே நா.த.க முன்பிருக்கும் மிகப் பெரிய சவால்.

`1 பூத் 10 யூத்` என்ற திட்டத்தை 2019-லேயே நா.த.க அறிவித்தும் இன்றுவரை அது செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது குறிப்பிடதக்கது. ஆகையால் இப்போதைய அறிவிப்புகள் எந்தளவுக்கு நடைமுறைக்கு வருகிறதென்பதை சீமான் கண்காணிப்பாரா.. அறிவிப்போடு விட்டுவிடப் போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதேபோல் நாம் தமிழர் கட்சியை உதறிவிட்டு பல நூறு பேர் வெளியேறியதற்கு அண்ணன் சீமானின் சர்வாதிகாரப்போக்கு ஒரு காரணம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பல தொகுதிகளுக்கு சம்பந்தம் இல்லாமலும் உள்ளூர் நிர்வாகிகளிலும் விருப்பத்துக்கு மாறாகவும் வேட்பாளரை களமிறக்கினார்.
இந்தமுறை 100 இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப் போகிறேன் என சீமான் அறிவித்திருப்பது சீனியர்களை கலக்கமடையச் செய்கிறது. பிரிதிநித்துவம் ஒருபக்கமிருந்தாலும் நிர்வாகிகளின் எண்ணோட்டத்தை கணக்கில்கொள்வதும் கட்சியை கட்டுக் கோப்பாக நடத்துவதுமே ஆரோக்கியமான ஜனநாயகம்” என்றனர்

கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர்கள் சிலரோ, “திராவிடக் கட்சிகளில் இளைஞர், மகளிர் அணிகளுக்கென தனி வரலாறு உண்டு. அவர்களை வீழ்த்த துடிக்கும் நா.த.க-வினுடைய பாசறைகளுக்கு அப்படி எந்தவொரு தனித்த செயல்பாடுகள் இருப்பதில்லை. இளைஞர் பாசறை, மகளிர் பாசறை மற்றும் மாணவர் பாசறை உள்ளிட்ட பாசறை பொறுப்பாளர்கள் மேடைப் பேச்சாளர்களாக மட்டுமே இருப்பது கட்சிக்கு பெரிய மைனஸாக இருக்கிறது. குறிப்பாக பாசறைக்கு என தனிப்பட்ட செயல்பாடுகளை இருப்பதையே கட்சித் தலைமை விரும்புவதில்லை, முன்பு தெருமுனைக் கூட்டம், திண்ணை பிரசாரங்களில் கட்சி காட்டிய மும்முரம் இப்போதில்லை” என்றனர்.

தொடர்ந்து “எதை எப்போது பேச வேண்டும் என்ற அரசியல் சாதுர்யம் தலைமைக்கு இருக்க வேண்டும். தி.மு.க ஆட்சி குறித்து மேடைகளில் பேசுவதற்கு எவ்வளவோ இருக்கும்போது, அதை மடைமாற்றுவதற்கு சமமாக பெரியார் எதிர்ப்பை மட்டும் குறிவைத்து பேசுவது கட்சிக்கு லாபமில்லை.
பள்ளிக் கல்லூரி மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழல், சட்டம் ஒழுங்கு பிரச்னை, பா.ஜ.க-வின் பாசிச போக்குகள் உள்ளிட்டவற்றை பிரசார இயக்கமாக மாற்றாமல் பெரியாரை திட்டிக் கொண்டிருப்பதில் எந்த வகையில் வாக்குவங்கி அரசியலுக்கு பிரயோஜனம் இல்லை. கூடுதலாக, தேர்தல் நெருங்கும் இச்சூழலில் சங்கி என்றால் நண்பன், பா.ஜ.க தலைவர்களை பேரறிஞர்கள் என வார்த்தைகளை விடுவதிலும் தலைமை கிஞ்சித்தும் கவனம் செலுத்துவதில்லை. மத்திய, மாநில அரசுக்கு எதிராக நா.த.க மாதம் ஒரு போராட்டத்தையாவது முன்னெடுக்க வேண்டும்” என்றனர்.

இதுவரை காணாத அளவில் `நிர்வாகிகள் விலகியதும், கறார் காட்டும் சீமானின் அணுகுமுறையாலும் கடந்தகால தேர்தல்களை காட்டிலும் நா.த.கவினரிடம் இப்போது உற்சாகமும் உத்வேகமும் குறைவாக காணப்படுவதாக சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். தோல்வியில் இருந்து மீள துடிக்கும் அ.தி.மு.க, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வேட்கையுடன் தி.மு.க, முதல் தேர்தலை சந்திக்கும் த.வெ.க-வும் களமிறங்கியிருக்கும் சூழலில் குழப்பங்களை தவிர்த்து வளர்ச்சியை நோக்கி நா.த.க-வை நகர வைப்பது அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்பிருக்கும் மெகா டாஸ்க்!
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
