அமெரிக்காவில் சிறுமிகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைதான ஜெஃப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார்.
எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருடன் உரையாடிய மின்னஞ்சல்கள், பகிர்ந்த வீடியோக்கள், புகைப்படங்கள், விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றைப் பொதுவெளியில் வெளியிட அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு நவம்பரில் சட்டம் இயற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 30 ஆம் தேதி 35 லட்சப் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் ஃபைல்ஸ்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது.
அதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் பில் கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடி, எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உட்பட பலரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
சமீபத்தில் இதுதொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவகாரத்தில் ட்ரம்பின் மனைவியான மெலனியா ட்ரம்ப்பிறகு தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
தற்போது இதுதொடர்பாக பேசியிருக்கும் மெலனியா ட்ரம்ப் எப்ஸ்டீனுடன் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று மறுத்திருக்கிறார்.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் பேசியிருக்கும் மெலனியா ட்ரம்ப், “என்னை பற்றிய இந்த வதந்திகள் முடிவுக்கு வர வேண்டும். ஊடகங்கள் மற்றும் அரசியல் எதிரிகள் ஜெப்ரி எப்ஸ்டீனுடன் என்னைத் தொடர்புபடுத்தி ஆதாரமற்ற கதைகளை உருவாக்கி வருகின்றனர்.
நான் எப்ஸ்டீனை இரண்டு முறை மட்டுமே சந்திருக்கிறேன். ஆனால் அவரை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாது.

எப்ஸ்டீன் தான் என்னை டொனால்ட் ட்ரம்ப்பிற்கு அறிமுகப்படுத்தினார் என்ற செய்தி முற்றிலும் தவறானது. நானும், ட்ரம்ப்பும் ஒரு கிளப்பில் தான் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டோம், அதில் எப்ஸ்டைனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். ஆனால், அதற்காக என்னை இதற்குள் இழுப்பது நியாயமற்றது. எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று ஆதங்கமாக பேசியிருக்கிறார்.




