அமைச்சர் கே.என்.நேரு மீதான அமலாக்கத்துறையின் ஊழல் புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அ.தி.மு.க எம்.பி இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டிருக்கிறது. இந்த விவகாரம் தற்போது தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.
இந்த நிலையில், அமைச்சர் கே.என்.நேரு, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இருவரும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஆர்.எஸ் பாரதி, “இந்த வழக்கே விசித்திரமானது. பல ஆண்டுகளுக்கு முன்பு வங்கி கடன் பெற்றது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோதே, அமலாக்கத்துறை சோதனை நடத்தி சில ஆவணங்களை எடுத்தது.
ஆனால், சி.பி.ஐ தொடர்ந்த மெயின் வழக்கை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே ரத்து செய்துவிட்டது. அடிப்படை வழக்கே ரத்தான பிறகு, அதில் எவ்வித முகாந்திரமும் இல்லை என்பதுதான் உண்மை.
அதன் பிறகு அமலாக்கத்துறை சில தகவல்களை மாநில அரசுக்கு அனுப்பியபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சியின் மூத்த தலைவர் கே.என்.நேரு என்றுகூடப் பார்க்காமல், உடனடியாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார். தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அந்த விசாரணையை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், அ.தி.மு.க எம்.பி இன்பதுரை தொடர்ந்த பொதுநல வழக்கில்தான், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய நீதிமன்றம் கூறியுள்ளது. இது அரசு ஏற்கெனவே எடுத்து வரும் நடவடிக்கையின் ஒரு பகுதிதானே தவிர, புதிய பின்னடைவு அல்ல.
தேர்தல் நேரத்தில் தி.மு.க-வின் செல்வாக்கைச் சிதைக்க டெல்லியில் இருப்பவர்கள் போடும் திட்டம் இது. முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை நள்ளிரவில் கைதுசெய்து 100 நாள்கள் சிறையில் வைத்தார்கள். இன்று வரை அந்த வழக்கில் என்ன முன்னேற்றம்? 2016-ல் பிடிபட்ட 570 கோடி ரூபாய் கன்டெய்னர் லாரி வழக்கு என்ன ஆனது? எனவே, அமலாக்கத்துறையின் நோக்கம் பொதுமக்களிடம் ஒருவரின் நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதே.
அமைச்சர் கே.என்.நேரு 41 தொகுதிகளுக்குத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் களத்தைச் சிறப்பாகத் தயார் செய்திருப்பதைப் பார்த்து பயந்துபோய் பா.ஜ.க-வும், அ.தி.மு.க-வும் இணைந்து இந்தச் சதியைச் செய்கின்றன. ஜெயலலிதா காலத்திலேயே பல வழக்குகளைச் சந்தித்து வெற்றி கண்டவர் நேரு. தட்டத் தட்டத்தான் பந்து உயரே எழும். அதுபோல, நேருவை எவ்வளவு துன்புறுத்தினாலும் அவர் இன்னும் தீவிரமாகப் பணியாற்றுவாரே தவிர, ஒருபோதும் சோர்ந்து போகமாட்டார்.

அச்சுறுத்தலுக்கு அஞ்சுகிற கட்சி தி.மு.க அல்ல. இந்த எஃப்.ஐ.ஆர் பதிவு வெறும் ஆரம்பக்கட்ட நடவடிக்கைதான். லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்பது நிரூபிக்கப்படும். தி.மு.க சட்டத்துறை இதனை நீதிமன்றத்தில் எதிர்கொண்டு, இந்த வழக்குக் கற்பனையானது என்பதை உறுதி செய்து வெற்றி பெறும்” எனத் தெரிவித்தார்.




