அமைச்சர் கே.என்.நேரு மீதான அமலாக்கத்துறையின் ஊழல் புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அ.தி.மு.க எம்.பி இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டிருக்கிறது. இந்த விவகாரம் தற்போது தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.
அதில்,“கபட நாடகத் தி.மு.க. அரசின் நகராட்சித் துறை அமைச்சரின் ரூ. 1020 கோடி ஊழலை அமலாக்கத்துறை எப்போதோ வெளிக்கொண்டு வந்தது. அப்போதே சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது வழக்கு தொடுக்கவும் சொன்னது. ஆனால், ஊழலின் ஊற்றுக்கண்ணை விசாலப்படுத்திக்கொண்டே செல்வதில் இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு கைதேர்ந்தது. ஆகவே, அமலாக்கத்துறை தந்த ஊழலுக்கான ஆதாரங்களைக் கண்டுகொள்ளவே இல்லை.
2026 தேர்தலில் வெல்லவே முடியாது என்று தெரிந்தும் தேர்தலுக்காக ஏதாவது தில்லுமுல்லுகளையும் கூட்டணிக்காகத் தகிடுதத்தங்களையும் தாராளமாகவும் ஏராளமாகவும் செய்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கும் தி.மு.க. அரசின் உச்சியைப் பிடித்து உயர் நீதிமன்றம் உலுக்கியுள்ளது.
நகராட்சித் துறை அமைச்சரின் ஊழல் குறித்து அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளுக்காகத் தந்துள்ள ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது. எனவே, உடனடியாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஊழல் மலிந்த திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசுக்கு நேர்ந்து வரும் துடைக்கவே முடியாத ஆகப் பெரிய அவமானங்களில் இதுவும் ஒன்று.
இதுவரை தனது அரசின் ஊழல்களுக்குப் பரிகாரமே தேடாத தி.மு.க. அரசு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள நகராட்சித் துறை அமைச்சரைத் தானாகவே ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். இல்லையேல் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
ஏற்கெனவே டாஸ்மாக்கில் 1,000 கோடி அளவிலான ஊழல். இப்போது நகராட்சித் துறையில் 1,020 கோடி ஊழல். அமலாக்கத் துறை அவிழ்த்துவிடும் தி.மு.க. அரசின் ஊழல்கள் எல்லாமே ஆயிரக்கணக்கான கோடிகளிலேயே உள்ளன.
மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த தி.மு.க. அரசை, வருகிற தேர்தலில் தூக்கி எறிந்து விசிலடித்துக் கொண்டாட மக்கள் காத்திருக்கின்றனர்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.




