2010-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான ஷிகார் தவான், ஆகஸ்ட் 2024-ல் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். அதைத் தொடர்ந்து தற்போது ‘Da One Sports’ என்ற விளையாட்டு அகாடமி மற்றும் தனது அறக்கட்டளை மூலம் பல சமூகப் பணிகளைச் செய்து வருகிறார். இவருக்கும் இவரின் முதல் மனைவிக்கும் கடந்த 2023-ம் ஆண்டு விவாகரத்து நடந்தது. அதைத் தொடர்ந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாக தெரிவித்திருந்தார்.
அந்த இக்கட்டான காலத்தில் சோபி ஷைன் என்ற பெண்ணுடன் காதல் வயப்பட்ட ஷிகர் தவான், அவரை திருமணமும் செய்திருக்கிறார். இது தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு அவர் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. விவாகரத்துக்குப் பிறகு ஆயிஷா முகர்ஜி ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் சொத்து பகிர்வு தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஆஸ்திரேலிய நீதிமன்றம், “மொத்த சொத்து மதிப்பில் 15 சதவீதத்தை ஆயிஷாவுக்கு வழங்க வேண்டும்” என ஷிகர் தவானுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ஷிகர் தவான் டெல்லி குடும்பவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், “2012-ல் திருமணம் நடந்த சில காலத்திலேயே, தனது கிரிக்கெட் வாழ்க்கையையும் புகழையும் கெடுக்கும் வகையில் அவதூறு பரப்புவேன் என்று ஆயிஷா மிரட்டி, தனது பணத்தில் வாங்கிய சொத்துக்களைத் அவரின் பெயருக்கு மாற்றக் கட்டாயப்படுத்தினார்.
இதன் அடிப்படையில் அவர் 7.46 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைத் தன்வசம் வைத்திருந்ததுடன், தவானிடமிருந்து கூடுதலாக 15.95 கோடி ரூபாய் மற்றும் ஒரு சொத்தையும் பெற்றிருந்தார். ஆனால், இவை அனைத்தும் இந்தியத் திருமணச் சட்டங்களுக்கு முரணானவை. நான் ஆஸ்திரேலிய நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்படவில்லை” என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், “அச்சுறுத்தல் மற்றும் மோசடி மூலம் ஷிகர் தவானிடமிருந்து பெற்ற 5.7 கோடி ரூபாயை, 9 சதவீத ஆண்டு வட்டியுடன் ஆயிஷா முகர்ஜி திருப்பித் தர வேண்டும். ஆஸ்திரேலிய நீதிமன்றம் வழங்கிய சொத்துப் பகிர்வு ஒப்பந்தம் செல்லாது. தவான் மற்றும் ஆயிஷாவின் திருமணம் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டதால், இந்த விவகாரத்தில் முடிவெடுக்க ஆஸ்திரேலிய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை.
ஆஸ்திரேலிய நீதிமன்றத்தின் உத்தரவுகள் எதற்கும் தவான் கட்டுப்பட்டவர் அல்ல. மிரட்டல், பணம் பறித்தல் மற்றும் ஏமாற்று வேலைகள் மூலம் தவானிடம் கையெழுத்து வாங்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த வழக்கில் வழங்கப்பட்ட சொத்துப் பகிர்வு தொடர்பான அனைத்து ஆவணங்களும் செல்லாதவை.
இந்தியச் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு திருமணத்தில், ஆஸ்திரேலிய குடும்பச் சட்டம் தலையிட முடியாது. அது இந்தியப் பொதுக் கொள்கை மற்றும் இந்து திருமணச் சட்டம், சொத்து மாற்றச் சட்டம் ஆகியவற்றிற்கு முரணானது” என உத்தரவிட்டிருக்கிறது.




