விஜய், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக அவரே அறிவித்திருக்கிறார். நாளையே வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டு தன்னுடைய தொகுதியிலிருந்தே பிரசாரத்தையும் தொடங்கவிருக்கிறார்.
விஜய் பெரம்பூர் தொகுதியை நம்பிக்கையுடன் டிக் அடித்ததற்கான காரணம் என்ன?
முதலில் விஜய் விருகம்பாக்கம் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடப் போவதாகவே தகவல் வெளியானது. தவெக முகாமிலும் அதை உறுதி செய்தனர்.
விஜய் பிறந்த வீடு அந்தத் தொகுதிக்குள்தான் வருகிறது. அதனால் செண்டிமெண்டாகவே அந்தத் தொகுதி தனக்கு ஒர்க் அவுட் ஆகும் என விஜய் நினைத்தார். ஆனால், கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பாக விஜய்யின் எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டது. காரணம், களத்தில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள்.
தவெக சார்பில் வார அடிப்படையில் தொகுதிவாரியாக சர்வே செய்து மக்களின் மனநிலையை நோட் செய்து கொண்டே வந்திருக்கின்றனர். அப்படி எடுக்கப்பட்ட சர்வேக்களில் தேர்தல் நெருங்க நெருங்க பெரம்பூர் தொகுதியில் தவெகவுக்கான ஆதரவு பெருகுவது கண்கூடாகத் தெரிந்திருக்கிறது. இதைத் தொடர்ந்துதான் பெரம்பூரை நோக்கி விஜய்யின் பார்வை திரும்பியிருக்கிறது.

கட்சியின் கட்டமைப்பு இந்தத் தொகுதியில் வலுவாக இருப்பதும் விஜய்யுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறது. மாவட்டச் செயலாளர் சிவா இருக்கிற 2,22,000 வாக்காளர்களில் 44,000 பேரை கட்சியின் உறுப்பினராக்கியிருக்கிறார். சென்னையிலேயே தவெகவுக்கு அதிக உறுப்பினர்கள் இருக்கும் தொகுதி பெரம்பூர்தான்.
மேலும், தொகுதிக்குள் கணிசமான அளவில் கிறிஸ்தவர்களின் வாக்கும் உழைக்கும் மக்களிம் வாக்குகளும் இருக்கிறது. அதுவும் தங்களுக்குச் சாதகமாக அமையும் என விஜய் நம்புகிறார்.
அதேமாதிரி, தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான ஆர்.டி.சேகர் மீது கட்சிக்குள்ளும் மக்கள் மத்தியிலும் நற்பெயர் இல்லை என்பது விஜய் தரப்பின் எண்ணம். ஆர்.டி.சேகரே மீண்டும் போட்டியிட்டால் சவால் கொஞ்சம் குறையுமென்று விஜய்யின் வியூக தரப்பு நினைத்தது.
அவர்களின் எணத்திற்கேற்பவே இப்போது திமுக சார்பில் ஆர்.டி.சேகரே மீண்டும் போட்டியிடுகிறார். அதேமாதிரி, எதிர் முகாமில் அதிமுகவும் தொகுதியை பாமகவுக்கு தள்ளிவிட்டது.

இந்தக் காரணங்களால்தான் விஜய் பெரம்பூரை டிக் அடித்தார் என்கின்றனர். நாளை முதல் விஜய் தொகுதிக்குள் பிரசாரத்தையும் தொடங்கவிருக்கிறார். இனிதான் களம் வேகமெடுக்கப் போகிறது(?)




