தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டடு நடிகராக இருந்த விஜய், த.வெ.க என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார். முதன்முறையாக தேர்தலைச் சந்திக்கும் அந்தக் கட்சியின் வரவு, மற்ற கட்சிகளைக் கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது.
இந்நிலையில், கடந்த ஒருமாத காலமாகவே விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடப் போகிறார் என்ற தகவல் பரவியது.
இதுகுறித்து நாமும் ஜூ.வி-யில் கட்டுரை எழுதியிருந்தோம். இந்நிலையில், நாம் கணித்தபடியே விஜய் திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடப் போவதாக இன்று அறிவித்திருக்கிறார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளில் ஒன்று திருச்சி கிழக்கு தொகுதி. திருச்சி மாநகரின் மையத்தில் அமைந்திருக்கும் இந்தத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ் இருந்து வருகிறார்.
மறுபடியும் அவர்தான் தி.மு.க சார்பில் வேட்பாளர். இந்நிலையில், த.வெ.க தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற அறிவிப்பால், இந்தத் தொகுதி லைம்லைட்டுக்குள் வந்திருக்கிறது.

இந்நிலையில், அவர் ஏன் திருச்சி கிழக்கைத் தேர்ந்தெடுத்தார் என்று விசாரித்தோம்.
“திருச்சி மாநகரத்தின் மையப்பகுதியில் உள்ள தொகுதி, கிராம பகுதிகள் இல்லாத தொகுதி, சிறிய தொகுதி, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என்று சிறுபான்மையினர் அதிகம் நிறைந்த தொகுதி என்பதால், ‘இங்கு நின்றால் அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. செலவு அதிகம் செய்ய வேண்டியதில்லை. எளிதாக ஜெயிக்கலாம்’ என்று திராவிடக் கட்சிகளில் பொதுவாக இந்தத் தொகுதியைப் பெற போட்டா போட்டி இருக்கும். அதேபோல்தான், விஜய் இந்தத் தொகுதியை விரும்பியிருக்கிறார்.
அதோடு,’திருச்சியில் தொடங்கினால் ஏற்படும் திருப்பம்’ என்ற அடிப்படையில்தான் எல்லா கட்சிகளும் இங்கு நிகழ்ச்சிகள் நடத்துவது போல் தனது மக்கள் சந்திப்பின் முதல் பயணத்தை திருச்சியில் தொடங்கினார்.
அப்போதே, விஜயின் ரசிகர் ஒருவர், ‘விஜய் திருச்சியில் போட்டியிடவேண்டும்’ என்று திருச்சி முழுக்க நோட்டீஸ் அடித்து ஒட்டி, பரபரப்பு பந்தி வைத்தார். அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்கிறார்கள். நகர பகுதிகளை மட்டும் கொண்ட தொகுதி. இங்கு கல்லூரிகளும் அதிகம். இளைஞர்களின் வாக்குகள் இங்கு அதிகம் விஜய்க்கு விழும். கல்லூரி மாணவர்களே நாங்கள் சொல்லாமலேயே விஜய்க்காக வாக்கு சேகரிப்பார்கள்.

அதனால், விஜய் இங்கு நின்றால் எளிதாக ஜெயிக்கலாம். அதனைக் கருத்தில் கொண்டே இங்கு நிற்க வேண்டும் என அவரைத் தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறார்கள். கடைசியில் தலைமையும், பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அடுத்தக்கட்ட புள்ளிகளும், ‘விஜய் திருச்சி கிழக்கில் நிற்க வேண்டும்’ என்று விரும்பினார்கள். அதனால், தற்போது விஜய் திருச்சி கிழக்கு தொகுதியிலும் வேட்பாளராகியிருக்கிறார்” என்றார்கள்.




