தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து கலந்து ஆலோசிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க மார்ச்.19 ஆம் தேதி டெல்லி சென்றிருந்தார்.
இவரைத் தொடர்ந்து அமமுக தலைவர் டிடிவி தினகரனும், பாமக தலைவர் அன்புமணியும் டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்திருந்தனர்.
இந்நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று (மார்ச். 23) சென்னை வந்திருக்கிறார்.
செய்தியாளர்களைச் சந்தித்த பியூஸ் கோயல், ” திமுக அரசு மீது மக்கள் விரக்தி மற்றும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கான அரசு வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். மகாராஷ்டிரா, பீகார், ஹரியானா போன்ற மாநிலங்கள் காங்கிரஸை வெறுத்தது போல தமிழக மக்களும் காங்கிரஸையும் அதன் கூட்டணி கட்சிகளையும் வெறுக்கிறார்கள்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக வரவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் அமர்ந்து பேசி தொகுதி பங்கீட்டு விபரங்களை அறிவிப்போம்.
நாங்கள் ஒரே குடும்பமாக இணைந்து செயல்பட்டு வருகிறோம். அனைவரும் திருப்தி மற்றும் மகிழ்ச்சி அடையும் வகையில் எங்களின் தொகுதி பங்கீடு அமையும்” என்று தெரிவித்திருக்கிறார்.




