கோவை வடவள்ளி 36-வது வார்டில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதனை திமுக கோவை மாநகர் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஷ்யாம் சுந்தர் ஆக்கிரமித்து வீடாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தப் புகார் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “இந்த கட்டடம் கடந்த 2019-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தப் பகுதியின் ஆரம்ப சுகாதார நிலையமாக பயன்படுத்துவதற்காக கட்டப்பட்டாலும் அங்கு போதிய இடவசதி இல்லை.

இதனால் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் சுமார் 200 மீட்டர் தொலைவில் வேறு கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. இந்த கட்டடம் துணை சுகாதார நிலையமாகவே செயல்படுகிறது.
அதில் ஒரு பகுதியை மட்டும் செவிலியர்களுக்கான குடியிருப்பாக பயன்படுத்திக் கொண்டு, 2 அறைகளை துணை சுகாதார நிலையமாகவும், 2 அறைகளை கிளினிக்காகவும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. ஆனால் 3 அறைகளை குடியிருப்புக்காகவும், ஒரு அறையை கிளினிக்காகவும் பயன்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக செவிலியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுப்பதற்காக விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது” என்றனர்.




