7
March, 2026

A News 365Times Venture

7
Saturday
March, 2026

A News 365Times Venture

தடைபோடும் அதிமுக; தாண்டிச் செல்லும் பாமக – அதகளப்படும் ஆற்காடு தொகுதி

Date:

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தொகுதியில், கடந்த முறைபோல அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க போட்டியிட விரும்புகிறது. இந்தத் தொகுதியில் 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, பா.ம.க வேட்பாளராகக் களமிறங்கியவர் பா.ம.க மாவட்டச் செயலாளரான ஆற்காடு முன்னாள் எம்.எல்.ஏ கே.எல்.இளவழகன். அப்போது, அ.தி.மு.க-வினரின் முழு ஒத்துழைப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. உள்ளடி வேலைப் பார்த்து பா.ம.க-வை வீழ்த்த காரணமாக இருந்ததுமே அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள்தான் என்ற குற்றச்சாட்டு உள்ளது . இணைந்து செயல்பட்டால் மட்டுமே இலை விரிந்து மாம்பழம் பழுக்கும் என்கிற சூழலே நிலவிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் வரும் தேர்தலிலும், `தன்னுடைய தீவிர ஆதரவாளர் இளவழகனுக்காக, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் பா.ம.க தலைவர் அன்புமணி ஆற்காடு தொகுதியை நிச்சயம் கேட்டுப் பெறுவார்’ என்று நம்புகிறார்கள் பாட்டாளிகள். இளவழகனும் தேர்தலில் போட்டியிடத் தயாராகி, ஆற்காடு தொகுதிக்குஉட்பட்ட கிராமந்தோறும் சென்று வாக்குச் சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

பா.ம.க முன்னாள் எம்.எல்.ஏ கே.எல்.இளவழகன்

கடந்த 1991 சட்டமன்றத் தேர்தலின்போது, ராணிப்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க சார்பாக போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்ற வேணுகோபால் மரணமடைந்ததால், தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 1993-ல் ராணிப்பேட்டை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலின்போது பா.ம.க தனித்து களமிறங்கியது. அப்போது, பா.ம.க வேட்பாளராக யானை சின்னத்தில் முதல்முறையாகக் களம் கண்டார் இளவழகன். 1996 தேர்தலிலும், யானை சின்னத்திலேயே பா.ம.க சார்பாக மீண்டும் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார் இளவழகன்.

இரு முறையும் பின்னடவைச் சந்தித்தபோதும், 2006 தேர்தலில் தி.மு.க கூட்டணியில் பா.ம.க இணைந்ததால், மனம் தளராமல் ஆற்காடு தொகுதியில் களமிறங்கி வெற்றிபெற்றார் இளவழகன். தொடர்ந்து, 2011 தேர்தலிலும் தி.மு.க கூட்டணியில் மீண்டும் ஆற்காடு தொகுதியில் போட்டியிட்ட இளவழகன் பின்னடைவைச் சந்தித்தார்.

2016 தேர்தலின்போது, `மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ என்ற பிரசார முழக்கத்தை முன்னெடுத்த சமயத்தில், ஆற்காடு தொகுதியில் இருந்து அணைக்கட்டு தொகுதிக்கு மாறிய இளவழகனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து, கடந்த 2021 தேர்தலின்போது, அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இணைந்த பிறகு மீண்டும் ஆற்காடு தொகுதிக்குத் திரும்பினார் இளவழகன். தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான ஜெ.எல்.ஈஸ்வரப்பனிடம் சுமார் 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் இளவழகன்.

ஒரு இடைத்தேர்தல், ஐந்து பொதுத்தேர்தல்கள் என ஆறு முறை சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொண்டு, ஏழாவது முறையாகவும் போட்டியிட ஆயத்தமான இளவழகனின் முயற்சிக்கு அ.தி.மு.க தடைபோடுவது பாட்டாளிகளைக் கொதிப்படைய வைத்திருக்கிறது.

எஸ்.எம்.சுகுமார்

அ.தி.மு.க-வின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளரான எஸ்.எம்.சுகுமார் கடந்த முறை ராணிப்பேட்டை தொகுதியில் தி.மு.க-வின் சிட்டிங் அமைச்சர் ஆர்.காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த முறையும் ராணிப்பேட்டை தொகுதியில் காந்தி களமிறங்கத் தயாராகிவிட்டதாலும், அங்கு வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் இஸ்லாமியர்களிடம் போதிய ஆதரவு கிடைக்கப் பெறாததாலும் எஸ்.எம்.சுகுமார் ராணிப்பேட்டையில் மீண்டும் களமிறங்கத் தயக்கம் காட்டுகிறார். அவரின் மாவட்டச் செயலாளர் பொறுப்பின்கீழ் ராணிப்பேட்டை தொகுதியும், ஆற்காடு தொகுதியும் இடம் பெறுகிறது. அந்த உரிமையிலும், தற்போது ஆற்காடு தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி வலுபெற்றுள்ளதாலும் தொகுதி மாறத் திட்டமிடுகிறார் எஸ்.எம்.சுகுமார்.

அண்மைக் காலமாக, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து சந்தித்து ஆற்காடு தொகுதியைக் கேட்டும் காய்நகர்த்திக் கொண்டிருக்கிறார் எஸ்.எம்.சுகுமார். அதே சமயம், பா.ம.க-வும் விட்டுக்கொடுப்பதாக தெரியவில்லை. அ.தி.மு.க-வின் தடைகளை பா.ம.க தாண்டிச் செல்வதால் ஆற்காடு தொகுதிக்குள் அந்த கூட்டணி அதகளப்பட்டிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related