தவெக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. தவெக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜூனா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நிர்வாகிகள் மத்தியில் அவர் ஆவேசமாக பேசியிருந்தார்.
ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, ‘வில்லிவாக்கம் தொகுதியில் ஒரு நல்ல மருத்துவமனை இல்லை. ஒரு நல்ல கல்லூரி இல்லை. அரசுப்பள்ளி இல்லை. மழை பெய்யும் போது முழுவதும் சாக்கடை நீர் வருகிறது. வில்லிவாக்கம் கழிவுநீர்வாக்கமாக மாறிவிட்டது.
தொகுதியில் எம்.எல்.ஏ அலுவலகமும் இல்லை. எம்.எல்.ஏவும் இல்லை. பேராசிரியர் அன்பழகனின் பெயரை அவர் பேரன் கெடுத்துக் கொண்டிருக்கிறார். இங்கே திமுகவும் இல்லை. அதிமுகவும் இல்லை. களத்தில் தவெக மட்டுமே இருக்கிறது.
5 வருடத்தில் 6 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறார்கள். அதில் 2 லட்சம் கோடியை முதல்வரின் குடும்பம் அடித்துவிட்டது. அமைச்சர்கள் 1 லட்சம் கோடியை அடித்துவிட்டனர்.
2015 இல் மழை வெள்ளத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட தொகுதி வில்லிவாக்கமே. இன்னமும் இந்த தொகுதி அப்படியே இருக்கிறது.

தலைவர் விஜய் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கூட அரசு மருத்துவமனைக்கு செல்லும் நிலையை ஏற்படுத்துவார்.
2014 வரைக்கும் மோடியா லேடியா என சவால்விட்டார் ஜெயலலிதா. உண்மையான அதிமுக தவெக பக்கம் வந்துவிட்டது.
பாஜகவுக்கு எதிராக தைரியமாக பேசும் இரண்டு தலைவர்கள் ராகுல் காந்தியும் விஜய்யும் மட்டும்தான்.
ஜனநாயகன் வெளியாக வேண்டிய நேரத்தில் இன்னொரு படம் வெளியானது. அந்தப் படம் ஒருநாள் கூட ஓடவில்லை. மக்கள் தியேட்டருக்கே வரவில்லை. திமுகவின் படத்துக்கு மட்டும் பாஜக எப்படி சான்றிதழ் கொடுக்கிறது?
வேலூரில் தலைவர் விஜய் நேற்று கண்கலங்கினார். எம்.ஜி.ஆரும் அரசியல் களத்தில் கண் கலங்கினார். ஜெயலலிதாவும் கண் கலங்கினார். இருவரும் வாழ்நாள் முழுவதும் திமுகவை ஓடவிட்டனர்.
பிரசார வழிகாட்டு நெறிமுறைகள் என்ற பெயரில் தலைவர் மக்களை சந்திப்பதை தடுக்கின்றனர்.
வில்லிவாக்கம் தொகுதிக்குள் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு என வாக்கு கேட்டு வந்தாலும் கதவை திறக்காதீர்கள்’ என்றார்.




