வருகின்ற சட்டசபை தேர்தலில் இளைஞர் அணியினருக்குத்தான் அதிக வாய்ப்பு என்றும், அதை உதயநிதி, தன் குழு மூலம் இப்போதே தேர்வு செய்து வருகிறார் என்றும் விருதுநகர் இளைஞர் அணி மாநாட்டிற்குப் பின்பு திமுக-வினரிடம் பேச்சாக உள்ளது.
இது கட்சியிலுள்ள சீனியர்களையும், மாவட்டச் செயலாளர்களையும் அப்செட் ஆக்கி வருவது ஒருபக்கமென்றால், தற்போது திமுக-வின் ஒவ்வொரு சார்பு அணி நிர்வாகிகளும் தங்கள் அணி நிர்வாகிகளுக்கு ஓரிரு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் உதயநிதிதியிடம் வைத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
திமுக-வில் உள்ள சார்பு அணிகளில் இளைஞர் அணி, மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, மாணவர் அணி, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர்கள் அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, மருத்துவ அணி, பொறியாளர் அணி, சுற்றுச்சூழல் அணி, மீனவர் அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, கல்வியாளர் அணி, தொண்டர் அணி, சிறுபான்மையினர் நல அணி, அயலக அணி, மாற்றுத்திறனாளிகள் அணி, ஆதி திராவிடர் நல அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, வர்த்தக அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, நெசவாளர் அணி, மகளிர் தொண்டர் அணி என்று ஒவ்வொரு அணியிலுமுள்ள மாநில நிர்வாகிகள் தலா இரண்டு இடங்கள் ஒதுக்கும்படி உதயநிதியிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

இது மட்டுமின்றி, சுப வீரபாண்டியன் வழிகாட்டலில் உதயநிதி ஸ்டாலினால் கடந்த 2024-ல் தொடங்கி வைக்கப்பட்ட கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அங்கம் வகிக்கும் திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கத்தினர் உதயநிதியுடன் மிக நெருக்கமாக உள்ளனர்.
வரும்காலத்தில் திராவிடக் கொள்கைகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் செயல்பட்டு வரும் இச்சங்கத்தினர் மீது உதயநிதி அதிக அக்கறை காட்டி அதற்கான உதவிகளை செய்து வருகிறார்.
அந்த அடிப்படையில் இச்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளை சட்டமன்றத்துக்கு அனுப்பி வைக்கும் வகையில் வருகின்ற தேர்தலில் சென்னை, மதுரை, சிவகங்கை, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சிலரை போட்டியிட தேர்வு செய்துள்ளதாகவும் திமுகவில் பேசப்பட்டு வருகிறது.
கூட்டணி கட்சியினருக்கு இடம் ஒதுக்குவது, திமுக-விலுள்ளவர்களுக்கு இடம் ஒதுக்குவதே பெரும் சவாலாக உள்ள நிலையில், திமுகவின் சார்பு அணியினரும், ஆதரவு அமைப்புகளும் போட்டியிட இடங்ககளை எதிர்பார்த்து உதயநிதியிடம் அழுத்தம் கொடுத்து வருவது திமுக தலைமைக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.




