கோவை மக்கள் குறித்து திமுக எம்.பி தயாநிதிமாறன் பேசியதற்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
கரூர் மாவட்டத்தில் நேற்று (பிப். 18) திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
இதில் கலந்துகொண்ட எம்.பி தயாநிதி மாறன் கோவை மக்கள், அவர்கள் ஊரைக் கெடுக்காமல் பக்கத்து ஊரை கெடுப்பார்கள் என்று பேசியிருக்கிறார்.
இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” திமுக கூட்டத்தில், கோவை மக்கள், பக்கத்து ஊரைக் கெடுப்பவர்கள் என்று அவமரியாதையாகப் பேசுகிறார் திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன்.
அதைக் கேட்டு சிரித்துக் கொண்டிருக்கிறார் முன்னாள் சாராய அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி.
கோயம்புத்தூர் மக்கள், பண்பானவர்கள். மரியாதை மிக்கவர்கள். தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களையும் போல, கோயம்புத்தூர் மக்களும், தங்கள் கடின உழைப்பால், தமிழகத்துக்கும், நாட்டிற்கும் தங்கள் பொருளாதார பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
திமுகவினர் தவிர மற்ற தமிழக மக்கள் யாருமே, தமிழகத்தைச் சுரண்டிக் கொழுக்க நினைப்பதில்லை.

கோபாலபுரக் குடும்பத்தை அண்டிப் பிழைக்கும் தயாநிதி மாறனுக்கே இத்தனை ஆணவம் இருந்தால், தங்கள் கடும் உழைப்பினால் தமிழகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் கோயம்புத்தூர் மக்களுக்கு எவ்வளவு சுயமரியாதை இருக்கும்.
தனது திமிர்த்தனமான பேச்சுக்கு, தயாநிதி மாறன் உடனடியாக கோயம்புத்தூர் மக்களிடம் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்.
திமுகவினரின் இந்த ஆணவத்தால்தான், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதி மக்களும், திமுகவைப் புறக்கணித்து வருகிறார்கள்.
வரும் தேர்தலில், தமிழகம் முழுவதுமே திமுகவுக்கு அதே நிலைதான் ஏற்படும்” என்று பதிவிட்டிருக்கிறார்.




