உணவுப் பயிர்கள், கைவினைப் பொருள்கள், உணவுப் பொருள்கள், பாரம்பர்ய தயாரிப்புகள், தோட்டப்பயிர்கள், மசாலாக்கள் போன்றவற்றிற்குப் பொதுவாக புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.
இந்த புவிசார் குறியீடு இருந்தால் போலியான பொருள்கள் புழகத்திற்கு வர முடியாது. அதேசமயம் உண்மையான மற்றும் தரமான பொருள்கள் பாதுகாக்கப்படும். அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு மதிப்பு கிடைப்பதுடன், உற்பத்தியில் லாபமும் கிடைக்கும்.
அது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அந்த ஊருக்குப் பெயர் கிடைக்கும். இந்த வகையில் இந்தியாவில் புவிசார் குறியீடு பெற்ற டாப் 6 பயறுவகைகள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.
நவாப்பூர் தூர் பருப்பு
மகாராஷ்டிராவின் நந்தூர்பார் மாவட்டத்தில் உள்ள நவாப்பூர் தாலுகாதான் “நவாப்பூர் தூர் பருப்பு”க்குப் பிறப்பிடமாகும். சிறிய வெள்ளை விதைகள் கொண்ட இந்த தூர் பருப்பு, அதிக புரதம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை கொண்டது. தீபாவளி காலத்தில் சந்தைக்கு வருவதால், மக்கள் இதை “திவால் தூர்” என்று அன்புடன் அழைக்கின்றனர். இது 2016 மார்ச் மாதம் புவிசார் குறியீடு பெற்றது.
குல்பர்கா தூர் பருப்பு
கர்நாடகாவின் கலபுரகி (குல்பர்கா) மாவட்டத்தின் மண் வளமே இந்த “குல்பர்கா தூர் பருப்பு” சுவைக்குக் காரணம். மிருதுவான மற்றும் இனிப்பு சுவை கொண்ட இந்த தூர் பருப்பு, ‘பட்கா தால்’ என்றும் அழைக்கப்படுகிறது. கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், தினசரி உணவுக்கு ஏற்றது. இது 2019ஆம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்றது.

பஹாரி தூர் பருப்பு
மிருதுவான சுவை மற்றும் நீண்ட காலம் கெட்டுப்போகாத தன்மை உடைய “பஹாரி தூர் பருப்பு”, உத்தராகாண்ட் மலைப்பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இதில் புரதம், நார்ச்சத்து, இரும்பு ஆகியவை அதிகம் உள்ளதால், இது ஆரோக்கிய உணவாகப் போற்றப்படுகிறது. பஹாரி மக்கள் இதை ‘சௌன்சா’ போன்ற பாரம்பரிய முறைகளில் சமைத்து வருகின்றனர். இது 2023 நவம்பரில் புவிசார் குறியீடு பெற்றது.
அட்டப்பாடி துவாரா
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி பழங்குடி மக்களின் பாரம்பர்ய பயறுதான் “அட்டப்பாடி துவரை”. பெரிய வெள்ளை விதைகள் மற்றும் கால்சியம், மெக்னீசியம், நார்ச்சத்து, புரதம் நிறைந்த இந்த பயறு, ஊட்டச்சத்து குறைபாடுகளைச் சரிசெய்யும் உணவாகப் பார்க்கப்படுகிறது. இது 2022 ஜூலையில் புவிசார் குறியீடு பெற்றது.
கஹத் பருப்பு
உத்தராகண்ட் ஹிமாலயப் பகுதியின் இயற்கை மருத்துவ உணவாகக் கருதப்படுவது “கஹத் பருப்பு”. இதில் இரும்பு மற்றும் புரதம் அதிகம் உள்ளதால், இது “ஏழைகளின் இறைச்சி” என்று அழைக்கப்படுகிறது. குமாவோனி மக்களின் சமையலில் கஹத் தால், பராத்தா, சூப் போன்ற பல உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது 2023ஆம் ஆண்டுபுவிசார் குறியீடு பெற்றது.

தண்டூர் சிவப்புப் பயறு
தெலங்கானாவின் தண்டூர் பகுதியில் விளைவிக்கப்படும் இந்த “தண்டூர் சிவப்புப் பயறு” 22–24% வரை புரதம் கொண்டது. இது மற்ற பயறு வகைகளைவிட மூன்று மடங்கு அதிக மகசூல் தருவதோடு, ஊட்டச்சத்து நிறைந்த உணவாகவும் விளங்குகிறது. இது 2022ஆம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்றது.




