திருச்சி, திருவெறும்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எதிரணியினருக்குதான் தேர்தல் பயம். மக்களுக்கான நலத்திட்டங்களை சூழ்ச்சி செய்து யார் தடுக்க நினைத்தாலும் அதனை முறியடிப்பார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தேர்தல் நேரத்தில் மத்திய அரசின் சூழ்ச்சியால் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதை நிறுத்தலாம். இதனால், NDA கூட்டணி வெற்றி பெறலாம் என்ற நினைப்பில் சூழ்ச்சி செய்ய பார்க்கிறார்கள். அதையும் சர்ஜிகல் ஸ்டிரைக் என்ற சொல்லக்கூடிய அளவில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வரவேண்டிய மகளிர் உரிமைத்தொகை 2,000 ரூபாயை அவர்கள் நிறுத்த முடிவு செய்தால், அதையும் சேர்த்து யாரிடம் சொல்லாமல் உடனடியாக 5,000 ரூபாயை அறிவித்தார்.
அமித் ஷா உள்ளிட்டோர் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகை தர வேண்டும் என முதலமைச்சரும், துணை முதல்வரும் சொல்லியுள்ளார்கள். அவர்களை நாங்கள் வரவேற்கிறோம்.
ஏற்கனவே, நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் வந்து சென்றதால் தான் நாங்கள் 40 இடங்களை தக்க வைத்தோம். அதேபோல், அவர்கள் அடிக்கடி வந்தால் கடந்த தேர்தலை விட சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் 200 இடங்களை கடந்து வெற்றி பெறுவோம். தி.மு.க-வுக்கு எதிராக என்.டி.ஏ கூட்டணி ஆர்ப்பாட்டம் நடத்துவது அவர்களின் தேர்தல் ஸ்டன்ட்டைக் காட்டுகிறது” என்றார்.




