விருதுநகர் மாவட்டம், சாத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் சாத்தூரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “நடப்பு நிதியாண்டில் தொடங்கப்பட்ட வளர்ச்சி பணிகள் அனைத்தையும் இந்த மார்ச் மாத இறுதிக்குள் முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
கோடைகாலம் வருவதால் குடிநீர் பிரச்னை வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குப்பைகளை முறைப்படி தரம்பிரித்து அகற்றவும், தெருவிளக்குகளை பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் மும்மொழிக்கொள்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு, அறிஞர் அண்ணா காலத்திலிருந்தே இருமொழி கொள்கையைத்தான் தமிழகம் ஏற்றுள்ளது. இருமொழிக்கொள்கையை தான் தி.மு.க. அரசும் பின்பற்றி வருகிறது. அதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் இருமொழிக்கொள்கையை ஆதரிக்கும் கட்சிதான் அமோக வெற்றி பெறும்” என பதிலளித்தார்.