திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (செப்.19) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது.
மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட காய்ச்சல் பாதிப்பு காரணமாக முப்பெரும் விழா தள்ளி வைக்கப்பட்ட நிலையில், நேற்று இந்த விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய துரைமுருகன், ” நீங்கள் உடல்நலத்தோடு இருப்பதில் எங்களுக்கு சுயநலம் உண்டு. உங்களை விட்டால் எங்களுக்கு வேறு கதி கிடையாது. எங்களுக்கு மட்டுமல்ல… தமிழ்நாட்டுக்கும் கதி கிடையாது. தமிழுக்கும் கதி கிடையாது.
இந்த இயக்கம் ஒன்றுதான் தமிழர்களைக் காக்கிறது. அந்தப் பொறுப்பை ஏற்றிருக்கிறீர்கள். உங்கள் உடல்நிலை முக்கியம். உங்களிடம் மன்றாடிக் கேட்கிறேன். கட்சிக்கு நீங்கள்தான் உயிர்நாடி. அதை நினைத்து உங்கள் உடல்நிலையைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று முப்பெரும் விழாவில் நா தழுதழுக்க, வார்த்தைகளால் மு.க.ஸ்டாலினிடம் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டிருக்கிறார் துரைமுருகன்.
தொடர்ந்து விழாவில் பேசிய அவர், ” நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை முடிக்கின்ற ஆற்றல் இங்கு வந்திருக்கின்ற கழக தோழனுக்கு உண்டு. நாம் களத்தில் இருக்கிறோம், எத்தனையோ தேர்தல்களை பார்த்திருக்கிறோம், வெற்றி பெற்றிருக்கிறோம், வீழ்த்தியும் இருக்கிறோம், வாகை சூடி இருக்கிறோம். தேர்தலில் அது சகஜம்.
ஆனால் கண்ணுக்கு தெரியாத ஒரு மாயாவி போல் வந்த ஒன்று இங்கே நின்றுவிட்டது. இந்த மாயாவி தமிழ்நாட்டில் பரவி இருக்கிறது, ஆனால் இது வெகு நாளைக்கு நிற்காது. ஒருமுறை ஏமாந்துவிட்டால், இனி திமுககாரனை எந்த கொம்பனாலும் ஏமாற்ற முடியாது.
மன்னாதி மன்னனனை எல்லாம் தோற்கடித்த கட்சி. இடைத்தேர்தல் வருகிறது. இந்த களம் நமக்கு ஒரு முக்கியமான களம். இந்த களத்தில் நாம் வென்றாக வேண்டும். நீங்கள் பழைய திமுககாரனாக மாறுங்கள். திமுகக்காரர் என்றால் சாதாரணமானவர் அல்ல.
இந்தக் கட்சியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்பதை இந்த தேர்தலில் காட்டியாக வேண்டும். எனக்கு என்ன செய்வீர்களோ தெரியாது.. போங்கள் காலில் விழுவீர்களோ, கையை பிடிப்பீர்களோ தெரியாது.. வெற்றியை நம்முடைய தலைவர் காலில் சேர்ப்பது தான் முக்கியம்” என்று பேசியிருக்கிறார்.




