வேலூர் எம்.பி-யும் தி.மு.க வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கதிர் ஆனந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “த.வெ.க அரசு தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுள்ளது. தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களையும் ஸ்டிக்கர் ஒட்டி மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இவைகளையெல்லாம் கேள்வி கேட்டால் வசைபாடிவிட்டு சட்டசபையை கேலிக்கூத்தாக சினிமா கொட்டகைபோல மாற்றிவிட்டார்கள்.
மக்களுக்கு நலத் திட்டங்களைக் கொண்டு செல்வதில் எந்தவகையான பிடிமானமும் கிடையாது. ஒரு முதலமைச்சர் அரசாங்க பணத்தில் வெளிநாடு செல்கிறார் என்றால், உடனடியாக `பிரஸ்மீட்’ அழைத்து `எதற்காக செல்கிறேன். எந்த நோக்கத்துக்காக செல்கிறேன். அங்கு யாரையெல்லாம் பார்க்கவிருக்கிறேன்’ என்று தெரியப்படுத்த வேண்டும். அதுதான் வழக்கம். ஆனால், பிரஸ்மீட் கொடுக்கவில்லை. எந்த வகையான அறிக்கையும் கிடையாது.
முதலமைச்சர் திடீரென்று கிளம்பிப் போனதாக சொல்கிறார்கள். சரி, போன இடத்தில் என்னென்ன செய்தார்? என்ற அறிக்கையும் கொடுக்கவில்லை. `இண்டஸ்ட்ரீஸை பார்க்கிறேன்’ என்று சொல்கிறார் முதலமைச்சர். ஆனால், இண்டஸ்ட்ரீஸ் அமைச்சரையே உடன் அழைத்து செல்லவில்லை. துறை அமைச்சர் இல்லாமல் முதலீட்டாளர்களை எப்படிப் போய் பார்க்கப் போகிறார்? ஆகையால், முதலமைச்சருக்கு இது எல்லாம் `டைம் பாஸ் ஆக்டிவிட்டி’ மாதிரி இருக்கிறது. ஒரு ஆட்சியாளராக தன்னுடைய கடமையை நிறைவேற்ற முதலமைச்சர் தவறிவிட்டார் என்பது தான் என்னுடைய கருத்து.
செங்கோட்டையன் வேலூருக்கு வந்து பேட்டி கொடுக்கும்போதும் மின்சார வெட்டு. அதேபோல, அண்ணன் திருமாவளவன் பேட்டி கொடுக்கும்போதும் கரன்ட் கட் ஆகிறது. இதையெல்லாம்தான் சட்டசபையில் கேள்விகளாக கேட்கிறார்கள். சட்டமன்றத்தில் ஆயிரக்கணக்கான கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால், இருபதோ, முப்பதோ கேள்விகளுக்கு மட்டும்தான் மாநில சர்க்கார் பதில் சொல்லியிருக்கிறது.
கேள்விகளுக்குப் பதில் இல்லை. பதிலை மறைப்பதற்காக நாடகத்தை அரங்கேற்றி, சட்டசபையை நாடக கொட்டகையாக மாற்றியுள்ளார்கள். இதுதான் இன்று ஜனநாயகம் படும்பாடு. தி.மு.க ஆட்சி இருக்கும்போது, எந்த விவசாயியிமே சாலையில் இறங்கிப் போராட்டம் செய்யவில்லை. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தவர் கலைஞர். இந்தியாவிலேயே அது ஒரு வரலாற்றுத் திட்டம்.
`நான் அடுத்த ஜென்மத்தில் விவசாயியாக பிறக்க விரும்புகிறேன்’ என்று முதலமைச்சர் விஜய் பேசிய பேச்சையெல்லாம் நாம் கேட்டோம். ஆனால், விவசாயிகள் சாலையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஜெயிலில் அடைப்பதுபோல அடைத்து வைத்திருக்கிறார்கள். விவசாயிகளை அழைத்து அவர்களின் குறைகளை கேட்டு, அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கக்கூட துப்பில்லாத ஆட்சிதான் நடக்கிறது.

இந்த மாதிரி ஆயிரக்கணக்கான கணைகளை தொடுக்க முடியும். நாங்களும் நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த அரசு தி.மு.க-வை தரக்குறைவாக பேசியும், உண்மைக்குப் புறம்பாகவும் சித்தரித்துக்கொண்டிருக்கிறார்கள். கண்டிப்பாக, மக்கள் மத்தியில் இந்த நியாயத்தை கொண்டுச் செல்வோம். மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு இந்த அரசாங்கம் ஒருநாள் பதில் சொல்லியே தீர வேண்டும்.
இன்றைக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் வ.உ.சி மைதானத்தில் நலத் திட்டங்களை கொடுத்துள்ளார். நலத்திட்டங்களை கொடுக்கும்போது, மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி, மேயர், கவுன்சிலர்கள் இருக்கிறோம். எங்கள் யாரையும் அழைக்கவே இல்லை. `கலெக்டரின் விருப்ப நிதியில் இருந்து நிகழ்ச்சியை நடத்துவதால், யாரையும் அழைக்க வேண்டாம்’ என்று கலெக்டர் சொன்னாராம். கலெக்டரின் விருப்ப நிதியாக இருந்தாலும்கூட இது மக்களின் வரிப்பணம். ஆகையால், மக்கள் பிரதிநிதிகளை வைத்துக்கொண்டுதான் நலத்திட்டங்களை கொடுக்க வேண்டும் என்பது தான் வரலாறு. அரசியல் பண்பு. இதைக்கூட த.வெ.க அரசாங்கம் கடைப்பிடிக்கவில்லை’’ என்றார் கொந்தளிப்போடு.




