சென்னையில் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை ரிப்பன் பில்டிங்கில் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை தவெக அமைச்சர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் அமைச்சர் என்.ஆனந்த் பேசுகையில், ‘மக்களின் வரிப்பணத்தில் ஒரு ரூபாய் கூட எடுக்காமல், உங்களுக்கு என்ன தேவையோ அதை எங்கள் முதல்வர் செய்து கொடுப்பார். முதல்வர் எப்போதும் உங்களுடன் இருப்பார். நாம் அனைவரும் கலந்து பேசி ஒரு நல்ல முடிவை எடுப்போம்’ என்றார்.
அமைச்சர் நிர்மல் குமார் பேசுகையில், ‘இது உங்களுடைய அரசு, உங்களுக்கு செய்யாமல் யாருக்கு செய்யப் போகிறோம்? உங்களுடைய பிரச்சினைகள் என்ன என்று எங்களுக்கு தெரியும். என்னென்ன செய்ய முடியுமோ, அதை செய்வோம். நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட வேண்டாம். உங்களை வருத்திக் கொள்ள வேண்டாம். எங்களால் என்ன செய்ய முடியுமோ, அதை செய்வோம்.
உங்களை நீங்கள் வருத்திக் கொள்வதை பார்த்து தான் முதலமைச்சர் கஷ்டப்படுகிறார்.” என்றார்
அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், ‘உங்கள் வீட்டுப் பிள்ளைகள் தான் நாங்களும். போராடுவது உங்களது உரிமை. உங்களது தேவைகளை செய்து கொடுக்கத்தான் நாங்கள் இருக்கிறோம். எளிய மக்களுக்கு எப்போதும் குரல் கொடுக்கக்கூடிய முதல்வர் இருக்கிறார். அமைச்சர் கஜானா காலி ஆகிவிட்டது என்றார். ஆனால் கஜானாவே இல்லை. காணாமல் போய்விட்டது’ என்றார்.

அமைச்சர் ஆதவ் பேசுகையில், ‘100 நாட்களில் இந்த ஆட்சியில் பல விஷயங்களை செய்து உள்ளோம். உங்களுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் என்னனென்ன செய்ய வேண்டும் என முதலமைச்சர் நினைத்து வருகிறார். நாங்கள் நான்கு அமைச்சர்கள் வரவில்லை உடன் முதலமைச்சரும் இருக்கிறார். அவரும் இதையெல்லாம் நேரில் பார்த்துகொண்டுதான் இருக்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வரப்போகிறோம் என கூறினோம். ஆட்சிக்கு வந்துவிட்டோம். ஆனால் நிர்வாகரீதியில் பல பிரச்னைகள் உள்ளது. கடந்த காலத்தில் எல்லாவற்றையும் ஒப்பந்த பணியாக அவுட் சோர்சிங்காக மாற்றிவிட்டார்கள். அதை ஒரே நாளில் சரி செய்வது சிரமம். நீங்கள் அமர்ந்து போராடும் போது எங்களுக்கும் முதலமைச்சருக்கும் தூக்கம் இல்லை.

கடந்த காலத்தில் இரவோடு இரவோடு கைது செய்தது போல் இல்லாமல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தூய்மை பணியாளர்கள் யார் மீதும் காவலர்கள் கை வைக்க கூடாது என முதல்வர் கூறி உள்ளார்
கடந்த காலத்தில் கடன் வாங்கி ஊழல் செய்தனர். ஆனால் நாங்கள் கடன் வாங்கி மக்களுக்கு நல்லது செய்கிறோம். எங்களுக்கு கொஞ்ச நேரம் கொடுங்கள். அதிகாரிகள் உடன் பேசி முதற்கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்க முடியுமா அதை செய்கிறோம்.’ என்றார்.




