தமிழ்நாட்டின் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதற்குச் சொல்லப்படும் முக்கியக் காரணங்களில் ஒன்று – திமுக சீனியர்கள் இன்னும் இளைஞர்களுக்கு வழிவிடாததே ஆகும்.
இந்த மாதிரியான குறைகளைக் கண்டுபிடிக்கக் குழு ஒன்றை அமைத்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.
அந்தக் குழுவின் பரிந்துரைப்படி, இன்று (ஆகஸ்ட் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
> கழகத்தின் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட, கிளைக்கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும், கிளைக்கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.
> சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரங்களிலும், சூழலுக்கு ஏற்ப பிற மாநகராட்சிகளிலும் வட்டக்கழகங்களை வலிமைப்படுத்திடக் கிளைக்கழகம் அமைக்கப்படுகிறது. 45 வயதுக்கு மிகாதவர் கிளைச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே இப்பொறுப்பை வகிக்க முடியும்.
> சென்னை மாநகராட்சியின் வட்டக்கழகங்கள் சராசரியாக 10 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் சராசரியாக 5 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். மாநகர-நகர-பேரூர் வட்டக்கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.
> பேரூர் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும், அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே பொறுப்பை வகிக்க முடியும் எனத் தீர்மானிக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். பகுதிக் கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.
> நகரக் கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்குகளைக் கொண்டிருக்கும். நகரக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும், ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் எனத் தீர்மானிக்கப்படுகிறது.
> சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் உருவாக்கப்பட வேண்டும். ஒன்றியக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.
> வருவாய் மாவட்டங்களின் அடிப்படையில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. பிரிக்கும்போது ஒரு தொகுதி மட்டும் எஞ்சியிருப்பின் அதே வருவாய் மாவட்டத்தில் பொருத்தமான கழக மாவட்டத்துடன் மூன்றாவது தொகுதியாக இணைக்கப்படும். மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும். இனி மாநகரச் செயலாளர் என்ற பொறுப்பு இருக்காது.

> கழகத்தலைவர் 110 மாவட்டங்களை அறிவித்தவுடன், மாவட்டச் செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகளின்படி 15 நாட்களுக்குள் ஒன்றியம்-நகரம்-பகுதி-வட்டக்கழகங்கள் பிரிக்கப்பட வேண்டும். தலைமைக்கழகத்தால் அனுப்பி வைக்கப்படும் பிரதிநிதி முன்னிலையில் மீண்டும் மாவட்டச் செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு, பிரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டுத் தலைமைக்கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.




