கர்நாடகா மாநிலம் கொல்லூரில் இருக்கும் மூகாம்பிகை அம்மன் கோயில் மிகவும் பிரபலம் ஆகும். இக்கோயிலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா பல முறை சென்று இருக்கிறார்.
இக்கோயிலுக்கு தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் வருகை தந்து தரிசனம் செய்தார். அவரை கோயில் நிர்வாகிகள் வரவேற்றனர். ஜோசப் விஜய் அம்மனை வழிபட்டு அம்மனுக்கு 1.6 கிலோ எடையுள்ள வெள்ளி வாள் ஒன்றைக் காணிக்கையாகச் செலுத்தினர்.
அந்த வாள் அம்மன் அருகில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. வெள்ளி வாள் மட்டுமல்லாது அம்மனுக்கு பட்டு சேலை மற்றும் பூக்களையும் கொடுத்தார்.
இது குறித்து கொல்லூர் கோவில் கமிட்டி தலைவர் பாபு ஷெட்டி கூறுகையில், ”கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து மூன்றாவது முதல்வராக விஜய் வந்து தரிசனம் செய்துள்ளார். அவர் எந்த விசேஷ கோரிக்கையும் அம்மனிடம் வைக்கவில்லை. ஆனால் ‘மங்களராதி’யுடன் பிரார்த்தனை செய்தார்.
அவர் அளித்த வெள்ளி வாள் எங்கள் கோவிலின் மதிப்புமிக்க காணிக்கைகளில் ஒன்றாகப் பாதுகாக்கப்படும். நாங்கள் அவருக்கு ஒரு வெள்ளித் தட்டில் பொறிக்கப்பட்ட தெய்வத்தின் உருவப்படத்தை வழங்கினோம்,” என்று ஷெட்டி கூறினார்.
1977 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். தங்க வாளை கொல்லூர் மூகாம்பிகைக்கு வழங்கிய காலத்திலிருந்தே தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் இந்தக் கோயிலுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கின்றனர்.
இதற்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மற்றும் மு.க.ஸ்டாலினின் மனைவி உட்பட தமிழகத்தைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர்.
கோயில் அர்ச்சகர் ராமச்சந்திர அடிகா கூறுகையில், ”எம்ஜிஆர் வாள் வழங்கிய பிறகு அண்டை மாநில பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஜெயலலிதா விஜயத்தின்போது எம்.ஜி.ஆர் வழங்கிய வாளை பார்த்துள்ளார்” என்று தெரிவித்தார்.
இசையமைப்பாளர் இளையராஜா வழங்கிய வைர ஆபரணங்கள் மற்றும் வைரம் பதித்த கிரீடத்தையும் அவர் நினைவு கூர்ந்தார். விஜய், கொல்லூர் அம்மனைப் பார்க்க வந்தபோது எம்.ஜி.ஆர். வழங்கிய தங்க வாளைப் பார்வையிட்டார். தரிசனம் முடிந்து மீண்டும் மங்களூரு விமான நிலையத்திற்கு காரில் சென்றார்.




