தமிழகத்தில் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. அந்தவகையில், திருச்சி மேற்கு தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட கே.என்.நேரு, த.வெ.க வேட்பாளர் ராமமூர்த்தியிடம் ஆரம்பக்கட்ட சுற்றுகளில் பின்னிலை நிலையிலேயே இருந்தார். இதனால், கே.என்.நேரு தரப்பு அப்செட்டில் ஆழ்ந்தது. இந்நிலையில், 15 – வது சுற்றுக்கு பிறகு முன்னிலை பெற தொடங்கியதும், அவர் பெருமூச்சுவிட்டார். இறுதியில், அவர் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றிவாகை சூடியிருந்தது. இந்நிலையில், இந்த தேர்தலில் இதுவரை கே.என்.நேரு மட்டும் தி.மு.க கூட்டணி சார்பில் நின்றவர்களில் வென்றுள்ளார்.
இந்நிலையில், தேர்தலில் வென்றதோடு மட்டுமல்லாமல் அவருக்கு இருந்த ஒரு சோக தேர்தல் வரலாற்றையும் புறந்தள்ளி வென்றிருக்கிறார். அதாவது, தி.மு.க எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்படும்போது அதிகமுறை தோற்றவர் என்பதை மாற்றி, இந்தமுறை வென்றிருக்கிறார்.
அதுபற்றி நம்மிடம் பேசும் தி.மு.க-வினர் சிலர்,
“தி.மு.க எதிர்க்கட்சி வரிசைக்கு போகும்போதெல்லாம் கடந்த 1991 – ம் வருட தேர்தலுக்கு பிறகு, கடந்த 2016 – ம் வருட தேர்தலை தவிர்த்து கே.என்.நேரு போட்டியிட்டபோதெல்லாம் தோல்வியையே தழுவியிருக்கிறார். தி.மு.க ஆளுங்கட்சியான போதுதான் வென்றிருக்கிறார்.
கடந்த 1991 – ம் வருட சட்டமன்ற தேர்தலில் அவரது சொந்த தொகுதியான லால்குடி தொகுதியில் தோல்வியைத் தழுவினார். அடுத்து, 2001 – ம் வருடம் அ.தி.மு.க ஆட்சி அமைந்தபோது இதே லால்குடி தொகுதியில் தோல்வியடைந்தார். அதன்பிறகு, 2011 – ம் வருட அ.தி.மு.க ஆட்சியின்போது திருச்சி 2 தொகுதியில் நின்று தோற்றார்.

அதே வருடம் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க பரஞ்சோதியிடம் தோல்வியைத் தழுவினார். திருச்சி மேற்கு தொகுதியாக அது மாற்றப்பட, கடந்த 2016, 2021 ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் வென்றார்.
இந்நிலையில், இந்த தேர்தலில் தி.மு.க-வின் தலைமையே தோற்க, தி.மு.க இரண்டாவது அல்லது மூன்றாவது என்று எந்த இடத்துக்கு போக போகிறது என்று தெரியாத நிலையில் வென்றிருக்கிறார்” என்றார்கள்.




