பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பில் (OPEC) இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியேறியதே உலக அளவில் தற்போதைய ஹாட் டாப்பிக்.
இந்த அமைப்பில் இருந்தால் ஒரு நாளைக்கு 3.6 மில்லியன் பீப்பா எண்ணெய் தான் உற்பத்தி செய்ய முடியும்… 2027-ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 5 மில்லியன் பீப்பா எண்ணெய் உற்பத்தி செய்வது ஐக்கிய அரபு அமீரகத்தின் இலக்கு. இதனால் தான், அந்த நாடு OPEC அமைப்பில் இருந்து வெளியேறுகிறது என்று கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகமோ, ‘இது கொள்கை ரீதியிலான முடிவு’ என்று கடந்துவிட்டது.
இதெல்லாம் இருக்கட்டும்… OPEC என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்… வாங்க!
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு என்பதன் சுருக்கமே OPEC. 1960-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த அமைப்பு நிறுவப்பட்டது.
இந்த அமைப்பை நிறுவிய ஐந்து நாடுகள் – ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா மற்றும் வெனிசுலா.
பெயரில் இருப்பதுபோலவே, பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் சில நாடுகளின் அமைப்பே இந்த அமைப்பு.
ஏன் இந்த அமைப்பு?
இந்த அமைப்பு தொடங்கப்படுவதற்கு முன்பு, எண்ணெய் சந்தையை மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த ஒரு சில எண்ணெய் நிறுவனங்கள் தான் கட்டுக்குள் வைத்திருந்தன.
அவை தான் எண்ணெய் உற்பத்தியையும், எண்ணெயின் விலையையும் முடிவு செய்து வந்தன.
எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தான் எண்ணெய் சந்தையை நிர்ணயிக்க வேண்டும் என்கிற கொள்கை அடிப்படையில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.
எண்ணெய் உற்பத்தியாளர்களிடம் எண்ணெய் சந்தை இருக்கும் போது, அவர்கள் உற்பத்திக்கு ஏற்ற விலையை நிர்ணயிக்க முடியும்… எண்ணெய் சப்ளையை தொடர்ச்சியாக வைத்திருக்க முடியும் என முடிவு செய்யப்பட்டது.

OPEC-ன் பணி என்ன?
எண்ணெய் சந்தையையும், எண்ணெய் உற்பத்தி நாடுகளையும் வரைமுறைப்படுத்துவதே இந்த அமைப்பின் முக்கிய பணி.
மேலும், ஒவ்வொரு எண்ணெய் உற்பத்தி நாடும் எவ்வளவு எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதையும் இந்த அமைப்பே முடிவு செய்யும்.
இதன் மூலம் அந்தந்த நாட்டிற்கு ஏற்ற உற்பத்தியும் நடக்கும். உலகத்திற்கு சரியான அளவிலான எண்ணெய் சப்ளையும் இருக்கும்.




