தெலங்கானாவில் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ்வின் மகள் கவிதா ‘தெலுங்கானா ராஷ்டிர சேனா’ என்கிற புதிய கட்சியை இன்று தொடங்கியிருக்கிறார்.
தெலங்கானாவில் ஒரு தனியார் விடுதியில் கட்சியின் பெயரை அறிவித்த கவிதா, ‘தெலங்கானா தனி மாநில கோரிக்கையின் போது இருந்த கே.சந்திரசேகர் ராவ், இப்போது இல்லை. அவர் நிறையவே மாறிவிட்டார்.
ஒரு சிலரின் பிடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார். காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தில் நடந்த குளறுபடிகளுக்கு எதிராக கேள்வி கேட்டதற்காக நான் கட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டேன். அந்தத் திட்டத்தில் கொள்ளையடித்தவர்கள் இன்னும் கே.சி.ஆர் யைச் சுற்றி இருக்கிறார்கள். தெலுங்கானா மாநிலத்தின் நலன்களையும் உரிமைகளையும் மையப்படுத்தியே தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தொடங்கப்பட்டது. ஆனால், காலப்போக்கில் அந்த கட்சியின் பெயரும் மாறிவிட்டது, கொள்கைக் கோட்பாடுகளும் மாறிவிட்டது.

ஒரு கட்சி அது எதற்காக உருவாக்கப்பட்டது என்கிற மையக்கருவையே மறக்குமானால் அந்த கட்சியால் நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்க முடியாது. தெலுங்கானாவின் கனவுகளையும் நோக்கங்களையும் நிறைவேற்ற ஒரு பிராந்திய கட்சி இங்கே தேவை. அந்தக் கட்சியாக நம்முடைய தெலுங்கானா ராஷ்டிர சேனா இருக்கும். தெலுங்கானா ராஷ்டிர சமிதியிலிருந்தும் என்னுடைய குடும்பத்திலிருந்தும் நானாக வெளியேறவில்லை. நம்மை தூக்கி வெளியே வீசினார்கள். இப்போது தெலுங்கானா மக்களைத்தான் என்னுடைய குடும்பமாக பார்க்கிறேன்’ என்றார்.
கவிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் கவிதாவே முன்வந்து கட்சியிலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.




