ராகுல் காந்தி பிரசாரத்திற்காக தமிழகம் வந்திருக்கும் வேளையில் தன்னை ‘சோதனை’ என்ற பெயரில் முடக்கி வைத்திருப்பதாகத் செல்வப்பெருந்தகை கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி குற்றம்சாட்டியிருந்தார்.
ஆனால் வருமான வரித்துறை செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தவில்லை என்று மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில் சோதனை நடத்தவில்லை என வருமான வரித்துறையினர் மறுத்திருந்த நிலையில் ஆதாரம் வெளியிட்டு செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேட்டி அளித்திருக்கிறார்.
வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய புகைப்படத்தை காண்பித்து பேசிய அவர், ” தேர்தல் நேரத்தில் ஏன் இதுபோன்று அச்சுறுத்த வேண்டும்?. சோதனை நடத்தியதால்தான் ராகுல் காந்தியின் பரப்புரைக்கு என்னால் செல்ல முடியவில்லை?.
வீட்டின் வாசலில் இருந்த சிசிடிவியை மட்டும் அணைக்காமல் விட்டதால் இந்த ஆதாரம் கிடைத்தது; சோதனைக்கு வந்த அதிகாரிகளைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக நிர்வாகி படப்பை மனோகரன் வீட்டில் உள்ள எனது அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை செய்தனர். வீட்டுக்குள் நுழைந்ததும் ‘பணம் எங்கே?” எனக் கேட்டு அதிகாரிகள் மிரட்டினர்.

சோதனை செய்யவில்லை என வருமான வரித் துறை அதிகாரிகள் மறுப்பு கூறுகின்றனர். சோதனை நடத்துவது தப்பு கிடையாது. உண்மையை மறைப்பது ஏன்?.
சோதனை என்ற பெயரில் வருமான வரித்துறையினர் அட்டூழியம் செய்கின்றனர். வருமான வரித்துறை இதுதொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.




