தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில், சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில், நடிகர் யோகிபாபு தன் குடும்பத்துடன் மதுரவாயல் தொகுதியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். அதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஓட்டுப்போடுவதன் வலியும் அதன் முக்கியத்துவமும் நமக்குத் தெரிய வேண்டும். பணத்திற்காக ஓட்டை விற்பது என்பது மிகப்பெரிய தவறு. ‘மண்டேலா’ திரைப்படத்தைப் பார்த்தால் ஒரு வாக்கின் வலிமை என்ன என்பது அனைவருக்கும் புரியும்.
இளைஞர்கள் பலர் வாக்களிக்க வருவதில்லை என்ற கருத்து நிலவுகிறது. அவர்கள் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும். ஓட்டு என்பது மிகவும் முக்கியமானது. இந்த ஜனநாயக நாட்டில் நமது நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிப்பது இளைஞர்கள்தான். எனவே, அனைவரும் திரண்டு வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நம் நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் இந்த ஜனநாயகக் கடமையில் பங்கெடுக்க வேண்டும்.” எனக் கேட்டுக்கொண்டார்.




