‘தாயும் பிள்ளையும்தான் என்றாலும் வாயும் வயிறும் வேறு’ என்பார்கள். தமிழக அரசியல் களத்தில் இந்தப் பழமொழியை இப்போது கொஞ்சம் மாற்றி ‘தகப்பனும் பிள்ளையும்’ எனச் சொல்லலாம். வடக்கே மறைந்த முலாயம் சிங் யாதவ் அவரது மகன் அபிஷேக் இடையில் வெடித்த மோதல் இந்தியா அறிந்ததது. ஆனால் தமிழ்நாட்டு அரசியலுக்கு இது கொஞ்சம் புதுசுதான்.
தேர்தல் அறிவிப்பு வந்த நாள் முதல் பதவியை முன்னிறுத்தி, கட்சி வித்தியாசமின்றி அங்கங்கே அரங்கேறிய அப்பா – மகன் மல்லுக்கட்டுகள், ‘தமிழ்நாட்டுலதானப்பா இருக்கோம்’ என ஒவ்வொருவரையும் கிள்ளிப் பார்க்க வைத்து விட்டன.
தந்தை – மகன் யுத்தத்தில் டாப் இடங்களைப் பிடித்த சில அன்பான (?) அப்பா – மகன்கள் யார் யார் பார்க்கலாமா?
பாமக திருவிளையாடல்!
‘திருவிளையாடல்’ படத்தில் ஞானப்பழத்தை வைத்து சிவன் ஆடிய திருவிளையாடலால் அவரின் மகன் முருகன் கோபித்துக் கொண்டு போனார். ‘உலகமே அம்மை அப்பன்’ எனச் சொல்லி தாய் தந்தையரைச் சுற்றி வந்து பழத்தை வாங்கிக் கொண்டார் விநாயகர்.
சிவனிடமிருந்து முருகனுக்கு ஞானப்பழம் கிடைக்காதது போல அன்புமணிக்கு மாம்பழத்தைக் கொடுக்கக்கூடாது என நீதிமன்றமெல்லாம் ஏறி இறங்கினார் பாட்டாளி மக்கள் கட்சியை நிறுவிய மருத்துவர் ராமதாஸ். ஆனால் ‘நேரம் கடந்து விட்டது எனவே இனி அதற்கு வாய்ப்பில்லை’ என எல்லா இடங்களிலும் கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டன.
பாட்டாளி மக்கள் கட்சியை தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஓரளவு செல்வாக்கு மிக்க கட்சியாய் வளர்த்தவர் ராமதாஸ்.
அதிமுக திமுக என மாறி மாறி கூட்டணி வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்த்து மத்திய அமைச்சர் பதவி வரை கட்சிக்குக் கிடைக்கச் செய்த ராமதாஸ் தன் ஒரே மகனான அன்புமணியை கட்சியின் தலைவராக நியமித் போது, பிற்காலத்தில் இப்படியெல்லாம் நடக்குமென நினைத்துகூடப் பார்த்திருக்க மாட்டார்.
தலைவராக அன்புமணி இருக்க, இளைஞரணித் தலைவராக தன் மகள் வழி உறவை ராமதாஸ் அறிவித்ததுதான் அப்பா மகன் இடையேயான விரிசலை வெளியுலகத்துக்குத் தெரிவித்த முதல் சம்பவம்.
‘இது நான் உருவாக்கிய கட்சி, அதனால் நான் வைத்ததுதான் சட்டம்’ என பெரிய டாக்டர் கொக்கரிக்க, நான் தனியா பனையூரில் ஆபீஸ் போட்டிருக்கேன், நிர்வாகிகள் என்னை அங்க வந்து பாருங்க’ என்றார் சின்ன டாக்டர் / தொடர்ந்து நிர்வாகிகள் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக சிதற, கடைசியில் தேர்தலும் வந்து விட்டது. ஆவணங்களின்படி அன்புமணியிடமே கட்சி இருப்பதாக அறிவித்து விட்டது தேர்தல் ஆணையம். நீதிமன்றம் கூட ஒருகட்டத்தில் ‘இது எதோ குடும்பப் பஞ்சாயத்துல போலத்தான் தெரியுது’ எனச் சொன்னது.
ஆக இப்போது ராமதாஸ் வசமிருந்து பா.ம.க கிட்டத்தட்ட நழுவி விட்டதாகவே தெரிகிறது.
வேறு வழியே இல்லாமல் இரட்டை இலையால் கைவிடப்பட்ட சசிகலா கட்சியுடன் கூட்டணி அமைத்து மகன் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்களுக்கு எதிராகத் தனது ஆதரவாளர்களை நிறுத்தி ஓட்டு கேட்டு வருகிறார் மருத்துவர்.
தளபதிக்கு அம்புட்டுத்தேன் மதிப்பு!
ஐந்தாண்டு காலம் முதல்வராக இருந்து ஆட்சி செய்த ஸ்டாலின் 2021 தேர்தலில் அமைந்த கூட்டணியை விட்டுவிடாமல், அவர்களையெல்லாம் அரவணைத்து, தொகுதிப் பங்கீட்டையும் சுமுகமாக முடித்து ‘அப்பாடா’ என நிம்மதியாக ஒரு பெருமூச்சை விட்டிருக்கலாம். ஆனால் இவ்வளவு வலிமை வாய்ந்தவராகப் பார்க்கப்பட்ட ஸ்டாலினின் வார்த்தையை திமுகவின் அமைச்சர் ஒருவரே உதாசீனப்படுத்தி, தான் நினைத்ததைச் சாதித்ததுவிட்டது இந்தத் தேர்தலில் யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம்.
ராணிப்பேட்டை தொகுதியை சிட்டிங் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த காந்தியிடமிருந்து பறித்து அவரின் மகன் வினோத்துக்குத் தந்தார் ஸ்டாலின்.

தந்தை மகன் இருவருக்கும் சீட்டை எதிர்பார்த்த காந்திக்கு இது பெரிய அப்செட். ‘சரி, பையனுக்கு இல்லாட்டிக்கூட பரவால்ல, அதெப்படி என் சீட்டைப் பிடுங்கி அவனுக்குக் கொடுக்கிறது’ என பொங்கி எழுந்தார். மாவட்டத்தில் தேர்தல் வேலையைத் தொடங்காமல் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
‘எனக்கு சீட் இல்லாட்டி கட்சி எப்படி மாவட்டத்துல ஜெயிக்குதுன்னு பார்க்கிறேன்’ எனத் தொண்டர்கள் மத்தியிலேயே பேசினார்.
விளைவு, அவரது மகனே கடைசியில் ‘நீங்களே நின்னுக்கோங்க’ எனச் சொல்லி விட்டு ஒதுங்கிக்கொண்டார். தேர்தல் நேரத்தில் தேவையில்லாத பிரச்னை வருமென நினைத்தோ என்னவோ ஸ்டாலினும் ‘என்னவோ பண்ணிட்டுப் போங்க’ என அதை அனுமதித்துவிட்டார்.
எப்படியோ, தேர்தல் முடிவு வந்த பிறகு ராணிப்பேட்டை மாவட்ட திமுகவில் அதிரடி மாற்றங்களை எதிர்பார்க்கலாமென்கிறார்கள் உடன்பிறப்புகள்.
நீங்க ஓட்டு கேட்டதெல்லாம் போதும்!
சென்னை திருவெற்றியூர் தொகுதியின் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடுபவர் குப்பன். இந்தத் தொகுதியில் இவரின் மகன் கார்த்திக்கும் போட்டி போட விரும்பினாராம். ஆனால் சீட் குப்பனுக்குக் கிடைத்துவிட்டதில் கார்த்திக் படு அப்செட்.

வீட்டுக்குள் நான்கு சுவர்களுக்கு மத்தியில் நடந்த சண்டை ஒரு கட்டத்தில் வீதிக்கு வந்துவிட்டது. குப்பனுக்கு ஆதரவாக ஓட்டு வேட்டையாடுவதற்காக கிளம்பி வந்த அதிமுக நிர்வாகிகளிடம் தகராறு செய்து அவர்களை விரட்டி விட்டிருக்கிறார் கார்த்திக்.
நொந்து போன கட்சிக்காரர்கள், ‘அப்பா மகன் சண்டையை சீக்கிரமா முடிச்சுட்டு பிரசாரம் செய்யற வழியப் பாருங்க’ என சமாதானம் பேசி வருகிறார்கள்.
கோட்டையாக வச்சிருந்தவர் வீட்டுலதான் ஓட்டை!
சென்னையை திமுகவின் கோட்டை என்பார்கள் உடன்பிறப்புகள். திமுக சென்னையில் அசைக்க முடியாத இடத்தில் இருக்க காரணாமான சில முக்கிய திமுக நிர்வாகிகளில் பழக்கடை ஜெயராமனும் ஒருவர். ஜெயராமனுக்குப் பிறகு அவரது மகன் ஜெ. அன்பழகன் கட்சிக்குள் வந்தார். ஸ்டாலினுக்கும் நம்பிக்கையான வரராகத் திகழ்ந்த அன்பழகன் கோவிட் காலத்தில் மறைந்துவிட்டார்.
அன்பழகன் மறைந்த அடுத்த சில மாதங்களிலேயே தேர்தல் வந்து விட, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு சீட் தரலாமென முடிவெடுத்த கட்சி அவரது தம்பியான கருணாநிதிக்கு சீட் தர, அவரும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.

ஐந்தாண்டு ஆட்சி முடிய, இந்த தேர்தலில் அன்பழகனின் மகன் ராஜாவுக்கு சீட் தர முடிவு செய்து அதை அறிவிக்கவும் செய்தார்கள்.
அன்ணன் மகனும் தனக்கு மகனே என நினைக்காத கருணாநிதி உடனடியாக கட்சி தந்த கிளைச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். உடனடியாக அந்த இடத்துக்கு வேறொரு நபரை நியமித்து கட்சியும் பதிலடி தந்தது.
இதுவரை திமுகவிலிருந்து கருணாநிதி விலகவில்லை என்றாலும் ராஜாவுக்கு ஆதரவாக அவர் பிரசாரமெல்லாம் செய்ய வாய்ப்பில்லை.
இந்த நிலையில் கருணாநிதியின் மகள் இரு தினங்களுக்கு முன் தவெகவில் போய் சேர்ந்திருக்கிறார்.
“பழக்கடை ஜெயராமன் கட்சிமீது அவ்வளவு விசுவாசமா இருந்தவர். அவருடைய வாரிசுகள் இப்படி நடந்துக்கிடறது ரொம்பவே வேதனையா இருக்கு என நொந்து கொள்கின்றனர்” உடன்பிறப்புகள்.




