பீகாரில் கடந்த 20 ஆண்டுகளாக நீடித்த நிதிஷ் குமாரின் ஆட்சி நிறைவுக்கு வந்துள்ள நிலையில், மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பா.ஜ.க-வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி பதவியேற்க உள்ளார். இதன் மூலம், பீகார் மாநில வரலாற்றிலேயே பா.ஜ.க-வைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமரப்போகிறார்.
பல முறை கட்சித் தாவலில் ஈடுபட்டாலும் தொடர்ந்து 20 ஆண்டுகளாக பீகார் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருந்தவர் நிதிஷ் குமார். கடந்த சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டு முதல்வரானார். அவருக்கு மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும் என விருப்பம் இருந்ததாகக் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து, அண்மையில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், நிதிஷ் குமார் தனது பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார். பா.ஜ.க சட்டமன்றக் கட்சித் தலைவராகவும், துணை முதலமைச்சராகவும் பணியாற்றி வந்த சாம்ராட் சவுத்ரி ஒருமனதாக முதல்வர் நாற்காலிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சாம்ராட் சவுத்ரி தனது நியமனம் குறித்து எக்ஸ் பக்கத்தில், “இது எனக்கு வெறும் பதவி மட்டுமல்ல. பீகார் மக்களுக்கு சேவை செய்வதற்கும், அவர்களின் நம்பிக்கையையும் கனவுகளையும் நிறைவேற்றுவதற்கும் கிடைத்த ஒரு புனிதமான வாய்ப்பாகும்.
மக்களின் எதிர்பார்ப்புகளை முழு அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் நிறைவேற்றுவேன் என்று நான் உறுதியளிக்கிறேன். பிரதமர் மோடியின் திறமையான தலைமையின் கீழ், பீகாரை வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் செழிப்பின் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல நான் தொடர்ந்து பாடுபடுவேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நாளை (ஏப்ரல் 15, 2026) பீகார் முதலமைச்சராக சாம்ராட் சவுத்ரி பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீகார் அரசியலில் ஜேடியு (JD-U) கட்சியின் ஆதிக்கம் குறைந்து, பா.ஜ.க தனது சொந்த பலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது இந்திய அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது.




