தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பரப்புரை தீவிரமாகியிருக்கிறது. திண்டிவனம் தொகுதி தி.மு.க கூட்டணிக் கட்சியான விசிக-வுக்கு ஒதுகப்பட்டது. அதனடிப்படையில் விசிக பொதுச் செயலாளர் வன்னி அரசு திண்டிவனம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அ.தி.மு.க வேட்பாளர் அர்ஜுனன் போட்டியிடுகிறார். எனவே, அர்ஜுனனை ஆதரித்துப் பிரசாரம் செய்த அ.தி.மு.க நட்சத்திரப் பேச்சாளர் நடிகை விந்தியா,“சமீபத்தில் தனது கூட்டத்தில் மதுபோதையில் வந்த தொண்டரைத் திருமாவளவன் அறைந்தார்.
குடித்தவனை அறைவதை விட, தெருவுக்குத் தெரு டாஸ்மாக் வைத்து அவர்களைக் குடிக்க வைத்த அதிகார போதையில் இருக்கும் ஸ்டாலினையோ, பிரேமலதாவையோ அறைய அவருக்குத் துணிச்சல் இருக்கிறதா? திமுக கூட்டணியில் திருமாவளவன் ஒரு கொத்தடிமை போல நடத்தப்படுகிறார். ஹோட்டலில் பரோட்டாவுக்கு எப்படி ‘குருமா’ ஒரு சைடு டிஷ்ஷோ, அதுபோலத்தான் தி.மு.க கூட்டணிக்கு ‘திருமா’ ஒரு சைடு டிஷ். அவருக்கு அங்கே சுயமரியாதை இல்லை. வேங்கைவயல், நாங்குநேரி, கள்ளக்குறிச்சி எனத் தனது சொந்த இன மக்கள் பாதிக்கப்பட்டபோது கூட, தனது அரசியல் லாபத்திற்காகத் திருமாவளவன் அமைதி காக்கிறார்.
ஒரு வில் வளைந்தால் அம்பு பாயும், ஆனால் அளவுக்கு மீறி வளைந்தால் அது உடைந்துவிடும். திருமாவளவன் இன்று உடைந்து போன வில்லாக இருக்கிறார். ஜெயலலிதா ஆட்சியில் அவருக்கு உரிய மரியாதை கிடைத்தது. ஆனால் இன்று, தன்னை அவமதிக்கும் நபர்களிடம் கூட வளைந்து கொடுத்து, ஒட்டுமொத்த சமூகத்தையும் தலைகுனிய வைக்கிறார்.” எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.




