தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட வேண்டிய த.வெ.க, 233 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பே த.வெ.க வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வேலையை சத்தமில்லாமல் தொடங்கிவிட்டன, ஆளும் கூட்டணியும், எதிர்முகாம் அணிகளும்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முந்தினம் நிறைவடைந்தது. நேற்று வேட்புமனுக்கள் பரிசீலனையும் நடந்து முடிந்தது. தமிழக தேர்தல் களத்தில் தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி உள்ளிட்ட இரண்டு அணிகளோடு, தமிழக வெற்றிக் கழகமும், நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளன. இந்நிலையில், தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வுக்குப் போட்டியாகத் தேர்தல் களத்தில் த.வெ.க-வின் தாக்கமும் கடுமையாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
த.வெ.க தலைவர் விஜய் பிரசாரத்திற்கு செல்வதிலேயே பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இதனால், சென்னையில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டிய விஜய், இரண்டு முறை அந்தப் பிரசாரத்தை ஒத்திவைத்துள்ளார். இந்நிலையில், த.வெ.க சார்பில் தமிழகம் முழுவதும் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தீவிரமாக பிரசாரத்திலும் இறங்க வேண்டும் என தலைமை உத்தரவு போட்டுள்ளது.
மேலும், சமூக வளைதளங்ளிலும் த.வெ.க-வின் ஐ.டி விங் தீவிர பிரசாரத்தை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது. இதனால், பல இடங்களில் ஆளுங்கட்சிக்கு நெருக்கடியாக த.வெ.க வேட்பாளர்கள் உருவாகும் நிலை உள்ளது. எனவே, த.வெ.க வேட்பாளர்களைக் களத்தில் இருந்து ஓரம்கட்ட அ.தி.மு.க மற்றும் தி.மு.க கூட்டணியினர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்கள் என சொல்லப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதிக்கு குமாரவேலையும், ஓசூர் தொகுதிக்கு அம்பரிஷ் என்கிற வேட்பாளரையும் களத்தில் இறக்கியது. ஆனால், இருவருமே வேட்புமனு தாக்கல் செய்ய வராமல் போனதால், அவசரமாக இரண்டு தொகுதிகளுக்கும் மாற்று வேட்பாளர்களைக் களத்தில் இறக்கியது த.வெ.க. ஊத்தங்கரை தொகுதிக்கு இளையராஜாவையும், ஓசூர் தொகுதிக்கு வேந்தர்கரசன் என்பவரையும் வேட்புமனு தாக்கல் செய்ய சொன்னது தலைமை.
இதேபோல் எடப்பாடி தொகுதியில் த.வெ.க சார்பில் நிறுத்தப்பட்ட அருண் குமார், முறையாக வேட்பு மனுவை நிரப்பாமல் போனதோடு, வேட்புமனு பரீசிலனை அன்றும் அவர் வரவில்லை. மாற்று வேட்பாளராக நிறுத்தப்பட்டவரின் வேட்பு மனுவும் முழுமையாக நிரப்பவில்லை. இதனால் இரண்டு வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து எடப்பாடி தொகுதியில் த.வெ.க சார்பில் யாரும் போட்டியிட முடியாத நிலை உருவாகிவிட்டது. இது தலைமைக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
த.வெ.க வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் காலை வாருவதால் என்ன செய்வது என நீண்ட ஆலோசனையில் த.வெ.க தலைமை இறங்கியுள்ளது. குறிப்பாக தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வின் வி.ஐ.பி வேட்பாளர்கள் களம் இறங்கும் தொகுதிகளில் த.வெ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அழுத்தம் அதிகமாக வருவதை தலையையும் அறிந்துள்ளது.

இது குறித்து த.வெ.க தலைமைக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம் பேசுகையில், “வேட்பாளர்கள் தேர்வில் விஜய் ரசிகர் மன்றத்தைச் சாராத பலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட, வேட்பாளர்களுக்கு ஏற்பட்ட பஞ்சமும் ஒரு காரணம் என்பதே உண்மை. கடைசி நேரத்தில் பல தொகுதிகளில் தகுதி வாய்ந்த வேட்பாளர்களைக் கண்டறிவது கட்சித் தலைமைக்கு கஷ்டமாகப் போனது. சுமார் ஐந்து சுவீட் பாக்ஸ் ஆவது செலவு செய்யும் நிலை இருந்தால் மட்டுமே, இந்த தேர்தல் களத்தில் தாக்குப் பிடிக்க முடியும். உண்மையில் அப்படி செலவு செய்யும் நபர்கள் விஜய் மன்றத்தில் குறைவு. அதையே இப்போது எங்களுக்கு எதிரான ஆயுதமாக தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் கையில் எடுக்கப் பார்க்கின்றன. பல இடங்களில் தி.மு.க வேட்பாளர்கள் எங்கள் கட்சியின் வேட்பாளர்களை முடக்க பல வழிகளிலும் முயற்சித்துள்ளார்கள். பலரிடம் விலைபேரமும் நடந்துள்ளது. எடப்பாடியில் நடந்ததையும் அந்த வகையிலான ஒரு முயற்சியாகவே பார்க்கிறோம்” என்கிறார்கள்.
தி.மு.க முகாமில் இருப்பவர்களோ, “முன்னணி அமைச்சர்கள் உள்ளிட்ட தி.மு.க-வின் தேர்தல் யுக்தி புள்ளிகள் முதலில் குறிவைத்திருப்பதே த.வெ.க வேட்பாளர்களைத் தானாம். அவர்களைச் சரிகட்டினாலே, தி.மு.க ஓட்டுகள் சிதறாமல், கட்சிக்கு வந்துவிடும் என கணக்கு போடுகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க வேட்பாளர்களை ஏற்கெனவே திருச்சி அமைச்சர் தரப்பு அணுகி பேசியிருக்கிறது.

கொங்கு மண்டலத்தில், செந்தில் பாலாஜியைப் பற்றிச் சொல்ல வேண்டாம். எப்படியாவது, வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறார். இதற்கு இடையூறாக த.வெ.க வேட்பாளர்கள் இருக்கக் கூடாது என அவர் ஒருபுறம் வேலை செய்கிறார்.
சென்னை மண்டலத்தில் மத்திய தொகுதியில் களம் இறங்கியுள்ள த.வெ.க வேட்பாளரை இரண்டு மாதங்களுக்கு முன்பே கவனித்துவிட்டனர்” எனச் சொல்கிறார்கள் தி.மு.க-வினர். இந்த வகையில்தான், எடப்பாடியில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மாயமான கதையும் வருகிறது என்கிறது அ.தி.மு.க தரப்பு.

“தலைவரின் பிரசாரமே தடுமாற்றத்தில் இருப்பதால், களத்தில் நிற்கும் வேட்பாளர்களை எப்படியும் சரிகட்டி அவர்களை பிராசரத்தின் வீரியத்தை குறைத்தாலே, தங்களுக்கான வாக்குகள் சிதறாமல் வந்துவிடும். தேர்தல் நெருங்க… நெருங்க, பல இடங்களில் த.வெ.க வேட்பாளர்கள் அமைதியாவதைப் பார்பீர்கள். அதற்கான காரணம் எங்களுக்கு மட்டுமே தெரியும்” என்று கண்சிமிட்டுகிறார்கள் சில ஆளும், எதிர் கட்சிகள் தரப்பில்.!




