23
April, 2026

A News 365Times Venture

23
Thursday
April, 2026

A News 365Times Venture

'8 மாத கர்ப்பிணியான நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர் மீது திமுக-வினர் தாக்குதல்' – போலீஸ் விசாரணை!

Date:

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று பாபநாசம் தொகுதி. இங்கு தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கை சேர்ந்த ஷாஜகான், அ.தி.மு.க-வில் சண்முகபிரபு, நா.த.க-வில் அனிஷ் பாத்திமா, த.வெ.க-வில் அசாருதீன் போட்டியிட்டனர். இன்று தொகுதி முழுவதும் விறு விறுப்பாக வாக்குபதிவு நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி வேட்பாளரான அனிஷ்பாத்திமா கர்ப்பிணியாக இருந்தும் ஒவ்வொரு வாக்குச்சாவடியாக சென்று வாக்குபதிவை பார்வையிட்டார். இதே போல் அம்மாபேட்டை அருகே உக்கடை கிராமத்தில் அமைக்கப்பட்ட மையத்தில் வாக்குப்பதிவை பார்வையிட சென்றார்.

மருத்துவமனையில் அனிஷ்பாத்திமா

அப்போது அனிஷ்பாத்திமா தன் கழுத்தில் அணிந்திருந்த நாம் தமிழர் கட்சி துண்டை எடுத்து விட்டு உள்ளே வரும்படி தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீஸார் சொல்ல அனிஷ் பாத்திமாவும் துண்டை எடுத்து விட்டு சென்றதாக சொல்கிறார்கள். ஆனால், வாக்குப்பதிவு மையத்தில் இருந்த, தி.மு.க-வினர் கூட்டணி கட்சியின் சின்னமான ஏணி சின்னம் பொறிக்கப்பட்ட பேட்ஜை அணிந்து கொண்டு இருந்துள்ளனர். இதுகுறித்து அனிஷ் பாத்திமா போலீஸாரிடம் முறையிட்டுள்ளார். அப்போது, நாம் தமிழர் கட்சியினருக்கும், திமுக-வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அனிஷ் பாத்திமாவை திமுக-வினர் தாக்கி கீழே தள்ளி விட்டதாக சொல்லப்படுகிறது. இதில் எட்டு மாத கர்ப்பிணியான அனிஷ் பாத்திமா மயக்கமடைந்ததால், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை அழைத்து சென்று தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்த்துள்ளனர். இதையறிந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாம் தமிழர் கட்சியினர்

இதுகுறித்து அனிஷ் பாத்திமா கணவர் ஷேக் அம்சத்அலி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “பாபநாசம் தொகுதியின் நா.த.க வேட்பாளர் என்ற முறையில் எனது மனைவி தொகுதி முழுவதும் வாக்குப்பதிவை பார்வையிட்டார். உக்கடை மையத்தில் பார்வையிட்ட போது, தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் சின்னமான ஏணி சின்னம் பொறித்த பேட்ஜ் அணிந்து கொண்டு மையத்தில் சிலர் அமர்ந்திருந்தனர். அங்கிருந்த போலீஸார் எனது மனைவியை மட்டும் கட்சி துண்டு அணிந்து வரக்கூடாது என்றீர்கள். தி.மு.க-வினர் பேட்ஜ் அணிந்துள்ளார்கள் இதை எப்படி அனுமதித்தீர்கள் என கேட்டோம். அந்த நேரத்தில் தி.மு.க-வினர் வேட்பாளர் என்று கூட பார்க்காமல் எனது மனைவி உட்பட எங்களை தரக்குறைவாக பேசினர்.

அப்போது போலீஸார் தலையிட்டு புகார் மனு எழுதி கொடுங்கள் என சொல்ல நாங்கள் புகார் மனு எழுதினோம். இதையடுத்து, அங்கிருந்த தி.மு.க-வினர், ஒன்றிய செயலாளர் சுரேஷ் முன்னிலையில், என் மனைவியை கீழே தள்ளிவிட்டு, செங்கல்லால் தாக்கினர். இதனால் நிலைகுலைந்த எனது மனைவி மயக்கமடைந்து விட்டார். இதைதொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளோம். 48 மணி நேரம் கழித்து தான் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு எதுவும் ஏற்பட்டுள்ளதா என கூற முடியும் என டாக்டர்கள் தெரிவித்தனர். எட்டு மாத கர்ப்பிணியான என் மனைவியின் நிலையை பார்க்கும் போது எனக்கு பயமாக உள்ளது. இதற்கு காரணமான தி.மு.க-வினர் மீது புகார் அளித்துள்ளோம்” என்றார். இது குறித்து தஞ்சாவூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கிருஷ்ணகுமார், போலீஸார் முறையாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related