20
March, 2026

A News 365Times Venture

20
Friday
March, 2026

A News 365Times Venture

`22 வருஷமா போராடிட்டு இருக்கோம்; ஆனா அரசு…' – ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் பேட்டி

Date:

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கூறி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டங்களை அறிவித்துள்ளது. பிப்ரவரி முதல் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடக்கும் எனவும் ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாநில பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் பொ. அன்பழகனிடம் இது தொடர்பாக பேசினோம்.  

பொ. அன்பழகன்

“1.1. 2004-ல் பழைய ஓய்வு ஊதியத் திட்டத்திற்கு மாற்றாக புதிய ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் அதற்கு முன்பே தமிழ்நாட்டில் 1.1.2003-ல் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டார்கள். புதிய ஓய்வூதியத்  திட்டத்தில் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. ஜாக்டோ ஜியோ தலைமையில் கடந்த 22 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இந்த புதிய  ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறோம்.

இந்தியாவில் தமிழ்நாடுதான் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று அதிகமாக போராடி வருகிறது. அரசு சார்பில் இதுதொடர்பாக விசாரிக்க குழு அமைத்தார்கள். ஆனால் எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவோம் என்று திமுக, அதிமுக அரசுகள் உத்தரவாதம் அளிப்பதால்தான் அவர்களை ஓட்டுபோட்டு தேர்ந்தெடுக்கிறோம்.

ஜாக்டோ ஜியோ போராட்டம்

ஆனால் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் ‘ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை ஒன்றிய அரசு வெளியிட்ட பிறகு அதனை ஃபாலோ செய்து நாங்கள் ஒரு திட்டத்தை வெளியிடுவோம்’ என்று சொல்லி இருக்கிறார். இதற்கு எதிரான கோபங்கள்தான் ஜாக்டோ ஜியாவை மீண்டும் போராட்டங்களை ஒருங்கிணைக்க வைத்திருக்கிறது. தமிழ்நாடு அரசுதான் மீண்டும் போராட்டங்களை நடத்த வழிவகுத்திருக்கிறது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தைத்தான்  செயல்படுத்துவோம்  என்று வாக்குறுதி எல்லாம் கொடுத்துவிட்டு திமுக அரசு அதற்கு மாறாக செயல்படுகிறது. கடந்த சில வருடங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களில் எல்லாம் ஓட்டு வாங்கி விட்டு இன்று ஒன்றிய அரசு கொண்டு வருவதைக்  கொண்டு வருவோம் என்றால் அதை எப்படி ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்வோம்.

ஜாக்டோ ஜியோ போராட்டம்

அதனால்தான் 10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி  மீண்டும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி இருக்கிறோம். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவிக்காத வரை தமிழ்நாடு அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும்” என்று ஆதங்கத்துடன் பேசினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related