தவெக தலைவர் விஜய் நாளை பெரம்பூரிலிருந்து பிரசாரத்தை தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. தொகுதியின் தேர்தல் அதிகாரி அனுமதி வழங்க மறுத்த நிலையில், இப்போது 30 ஆம் தேதி விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி வேண்டி கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 25 நாள்களே இருக்கும் நிலையில், தவெக தலைவர் விஜய் நாளை (மார்ச் 28) தனது பிரசாரத்தை தொடங்குவதாக இருந்தார். பெரம்பூரில் தொடங்கி கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் என 5 தொகுதிகளில் மொத்தம் 5 பாய்ன்ட்டுகளில் நின்று விஜய் பிரசாரம் செய்யுமாறு திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்காக முறைப்படி தேர்தல் ஆணையத்தின் அனுமதியும் கோரப்பட்டிருந்தது. விஜய் பெரம்பூரில் பரப்புரை செய்யவிருந்த MKB நகர் சந்திப்பில் தவெக கோரிய அளவுக்கு 3000 பேர் கூட முடியாது எனக் கூறி காவல்துறை அனுமதி வழங்க மறுத்தது. இதனைத் தொடர்ந்து தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும் விஜய்யின் பிரசாரத்திற்கான அனுமதியை மறுத்தார். விஜய்யின் முதல் பிரசாரத்துக்கே அனுமதி கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த தவெக நிர்வாகிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து மார்ச் 30 ஆம் தேதி பெரம்பூரின் விவேகானந்தர் 2 வது தெருவில் விஜய் கலந்துகொள்ளும் தெருமுனை பிரசாரக் கூட்டத்தை நடத்த தவெக நிர்வாகிகள் தொகுதியின் தேர்தல் அலுவலரிடம் மனு கொடுத்திருக்கின்றனர். மனுவின் ஹைலைட்டாக கூட்டத்தில் 100 பேர் மட்டுமே கலந்துகொள்வார்கள் எனக் கூறப்பட்டிருக்கிறது. இதேமாதிரி, 30 ஆம் தேதி சென்னையின் வேறு சில தொகுதிகளிலும் கூட்டம் நடத்த தவெகவினர் தயாராகி வருகின்றனர்.




