தவெக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் ஜே.சி.டி பிரபாகர் வேட்பாளராக களமிறங்குகிறார். இந்நிலையில், நேற்று தொகுதியில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. அதில் பேசிய மாவட்டச் செயலாளர் அப்புனு, ‘நுங்கம்பாக்கத்தில் கட்சி நிகழ்ச்சியை நடத்த தேர்தல் அலுவலரின் காலில் விழுந்தும் அனுமதி கொடுக்கவில்லை..’ என குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
தவெக சார்பில் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர் அறிமுக கூட்டம் நாளை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெறவிருக்கிறது. முன்னதாக, இந்த நிகழ்ச்சி நேற்று (மார்ச் 27) அதே ஹோட்டலில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியை நடத்துவதற்கான அனுமதியை தாமதமாக கேட்டதால் தேர்தல் அலுவலர் அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால்தான் வேட்பாளர் அறிமுக கூட்டம் நாளை நடக்கவிருக்கிறது. நிகழ்ச்சி சம்பந்தமான அனுமதி பெறும் வேலைகளில் மாவட்டச் செயலாளர் அப்புனுதான் ஈடுபட்டிருந்தார்.

பொதுக்கூட்டத்தில் அதைப் பற்றி பேசிய அப்புனு, ‘நுங்கம்பாக்கத்தில் அந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதி வேண்டி ஆயிரம் விளக்கு RO வின் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் காத்து கிடந்தோம். இரவு 7:30 மணிக்குதான் அதிகாரி எங்களை சந்தித்தார். எங்கிருந்தோ ஒரு போன்கால் அவருக்கு வந்தது, உடனே நிகழ்ச்சியை நடத்துங்கள் அல்லது நடத்தாமல் போங்கள் எனக் கூறிவிட்டு சென்றுவிட்டார். அவரின் காலில் விழுந்து அனுமதி கேட்டும் கொடுக்கவில்லை. இத்தனைக்கும் காவல்துறை நிகழ்ச்சியை நடத்த NOC கொடுத்திருந்தது. தேர்தல் அலுவலர்கள் இன்னமும் திமுகவுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். தளபதியின் அனுமதியைப் பெற்று தொகுதிதியில் தேர்தல் அலுவலருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்’ என்றார்.




