11
April, 2026

A News 365Times Venture

11
Saturday
April, 2026

A News 365Times Venture

விருதுநகரில் வெற்றி வாகை சூடுவாரா விஜய பிரபாகரன்? – எப்படி இருக்கிறது களம்?

Date:

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில், தே.மு.தி.க-வின் மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட மாணிக்கம் தாகூர், 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

இந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துள்ள தே.மு.தி.க., விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரனை வேட்பாளராக களமிறக்கியுள்ளது. அங்கே அவருக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்ற கேள்விகளுடன் தொகுதிக்குள் வலம் வந்தோம்.

தமிழகத்தின் பருப்பு, எண்ணெய் தேவையில் 80 சதவிகிதத்தைப் பூர்த்தி செய்யும் வணிக நகரம் என்பதால், மானாவாரி விவசாயம்தான் முக்கியத் தொழில். 35% நாயக்கர், 25% ரெட்டியார், 20% நாடார், 20% இதர சமூகத்தினரும் வசிக்கின்றனர். ‘விட்டதைப் பிடிக்க வேண்டும்’ என்ற கனவுடன் விருதுநகரில் மகனை களமிறக்கியுள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா, வெற்றியை எட்டிப் பிடிப்பதற்கான வியூகங்களையும் வகுத்துவருகிறார்.

விஜயபிரபாகரன்

எப்படி இருக்கிறது களம்?

தொகுதி தே.மு.தி.க-விற்கு ஒதுக்கப்பட்டதால், தி.மு.க-வினர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. விஜயபிரபாகரனின் வெற்றிக்காக தி.மு.க-வினர் உழைப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினரும், எம்.பி., மாணிக்கம் தாகூரும் முறுக்கிக்கொண்டு நிற்கின்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு கைநழுவிப்போனதும், தந்தை விஜயகாந்த்தின் மறைவு ஏற்படுத்தியுள்ள அனுதாப வாக்குகளும் கைகொடுக்கும் என நினைக்கிறார் விஜய பிரபாகரன். எனவே, பிரசாரத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க-வை விமர்சிப்பதைக் குறைத்துக் கொண்டு, தி.மு.க அரசின் சாதனைகள், திட்டங்களை முன்வைத்து வாக்கு கேட்டு வருகிறார்.

அ.தி.மு.க

அ.தி.மு.க வேட்பாளராக தொழிலதிபர் கணேசன் போட்டியிடுகிறார். இவர் இந்த தொகுதிக்கு புதுமுகம். இந்த முறையும் தொகுதி பா.ஜ.க-விற்கு ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில், கடந்த ஆறு மாதங்களாகவே களப்பணி ஆற்றி வந்த விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் பாண்டுரங்கன், பெருத்த ஏமாற்றத்தில் உள்ளார். எனவே, கணேசனின் வெற்றிக்காக பா.ஜ.க-வினர் உழைப்பது சந்தேகமே.

இத்தொகுதியில் இளைஞர்களின் வாக்குகளும் கணிசமாக இருப்பதால், நாம் தமிழர் வேட்பாளர் லட்சுமணன், த.வெ.க வேட்பாளர் செல்வம் ஆகியோர் இளைஞர்களின் வாக்குகளையும், குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்களை குறி வைத்து தேர்தல் பிரசாரத்தையும் மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக தி.மு.க கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குக்கூட விஜய பிரபாகரன் வராதது, கூட்டணிக் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விஜயபிரபாகரன் – செல்வம்- கணேசன்

“தேர்தலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ள நிலையில், ஒரு வேட்பாளர் இப்படி அலட்சியம் காட்டலாமா?” என்றார் 56 வயதான கரும்புச்சாறு கடை உரிமையாளர் ராமலிங்கம்.

சூலக்கரையில் வெள்ளரிக்காய் வியாபாரம் பார்த்து வரும் 43 வயதான அன்னலெட்சுமி, “தமிழகத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றிக்கான மிகக் குறைந்த  வாக்கு வித்தியாசம் என்றால், விருதுநகர்தான். தற்போது அமைந்துள்ள கூட்டணி, வெற்றிக்கான கூட்டணி. விஜய பிரபாகரனை கேப்டனாகவே பெண்களும், இளைஞர்களும் பார்க்கிறார்கள். எங்களின் வாக்கு மீண்டும் தே.மு.தி.க-விற்குதான்” என்கிறார்.

பேருந்திற்காகக் காத்திருந்த தாதம்பட்டியைச் சேர்ந்த 35 வயதான கோவிந்தன், “விஜய பிரபாகரன் ஒரு பிரபலம், சென்னையில் வசிப்பவர். அ.தி.மு.க வேட்பாளரான தொழிலதிபர் கணேசன், பக்கத்து தொகுதியான சிவகாசிக்காரர். தொழில் மனநிலையில் உள்ள அவர், தொழிலைக் கவனிப்பதில்தான் அக்கறை கொள்வார். இந்த சூழலில், நா.த.க., த.வெ.க இரண்டு வேட்பாளர்களுமே உள்ளூர்க்காரர்கள், இளைஞர்கள். தொகுதியைப் பற்றி தெரிந்தவர்கள். அவர்களை எளிதாக சந்தித்து பிரச்னைகளைக் கூற  முடியும் என நம்புகிறோம்” என்றார்.

“நாடாளுமன்றத் தேர்தல் என்பது வேறு. சட்டமன்றத் தேர்தல் என்பது வேறு. மூன்று முறை தொடர்ந்து தி.மு.க இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு மாற்றம் வேண்டும் என்றே பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள்.  அதே நேரத்தில், மக்களின் மனநிலையைக் கணிக்கவும் முடியாது. களம் எப்படி வேண்டுமென்றாலும் மாறலாம் என்றே தோன்றுகிறது” என்று புதிர் போட்டது போல் பேசினார், விருதுநகர் பஜாரில் உணவகம் நடத்தி வரும் அப்துல்.

விஜயபிரபாகரன்

யாருக்குச் சாதகம்?

“விருதுநகரில் விஜய பிரபாகரன் வெற்றிக்காக உழைத்தாக வேண்டும்” என தி.மு.க-வினரிடம் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதால், தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை அவரது இல்லத்திற்கே அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறார்.

எனவே, ‘சொந்தக் கட்சியைவிட தி.மு.க-வின்  வாக்குவங்கி பலம் தனக்கு கைகொடுக்கும்’ என்று நினைக்கிறார் விஜய பிரபாகரன். களச்சூழலும் அதையே பிரதிபலிப்பதால், விஜயபிரபாகரன் வெற்றிக் கனியை எட்டிப்பறிக்க கூட்டணிக் கட்சியினர் எந்தளவுக்கு தோள் கொடுக்கப்போகின்றனர் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"பா.ஜ.க-வுக்கு பன்முகம் கிடையாது, கோர முகம் தான் இருக்கிறது"- செல்வபெருந்தகை கடும் தாக்கு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிள்ளியூர் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல்...

மார்ச் 23, ஏப்ரல் 7 தேதிகளில் கச்சா‌ எண்ணெய் விலை சரிவு: ட்ரம்ப் அறிவிப்பு முன்னரே கசிந்ததா?

கடந்த மார்ச் 23 மற்றும் ஏப்ரல் 7 தேதிகளில், கச்சா எண்ணெய்...

”50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் விசிட்டிங் கார்டு கூட அடிச்சது கிடையாது” – வைத்திலிங்கம்

ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வைத்திலிங்கம். இவர் புகைப்படத்துடன் கூடிய...