சட்டமன்றத் தேர்தலுக்கான தவெகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய் இன்று அறிவிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதைத் தொடர்ந்து விஜய் தேர்வு செய்திருக்கும் முக்கியமான 50 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் பனையூருக்கு வருகை தர ஆரம்பித்திருக்கின்றனர்.



தவெகவிடம் NDA தரப்பிலிருந்து கூட்டணிக்காக பேசி வருவதாக தகவல் வெளியாகிய நிலையில், விஜய் இன்று தவெக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 50 க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை இன்று அறிவிக்கவிருப்பதாக பனையூர் வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.
பிப்ரவரி 20 ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக வேட்பாளர்களை இறுதி செய்யும் வேலையை தவெக தலைமை செய்து வந்தது.
ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்களை பரிசீலனை பட்டியலில் வைத்து அதிலிருந்து ஒரு வேட்பாளரை விஜய் டிக் அடித்திருக்கிறார். அந்த வகையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த் – தி.நகர், அருண்ராஜ் – திருச்செங்கோடு, ராஜ்மோகன் – எழும்பூர், மரிய வில்சன் – திருவொற்றியூர் – தொகுதிகளுக்காக நேர்காணலில் கலந்துகொள்கின்றனர்.
இவர்கள் போக தஞ்சை மத்திய மாவட்டச் செயலாளர் சரவணன், திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் எம்.எல்.பிரபு, ராணிப்பேட்டை காந்திராஜ், புதுக்கோட்டை பர்வேஸ், சேலம் பார்த்திபன், விருகம்பாக்கம் சபரிநாதன், ஆர்.கே.நகர் சுறா வேலு, திருக்கோவிலூர் பரணி பாலாஜி, ஆலங்குளம் விபின், செஞ்சி குணா, காரைக்குடி பிரபு போன்றோர் நேர்காணலுக்காக வந்திருக்கின்றனர்.







இவர்கள் இறுதிசெய்யப்பட்ட வேட்பாளர்கள் என்பதால் தலைமையிடமிருந்து அழைப்பு வந்தவுடன் பொக்கே மற்றும் ஸ்வீட் பாக்ஸூடன் பனையூர் அலுவலகத்துக்கு வந்திருக்கின்றனர். விஜய் இவர்களை சந்தித்து வாழ்த்து கூறி, தொகுதியில் வேலையை தொடங்குமாறு கூறவிருக்கிறார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நேர்காணல் முடிந்தவுடன் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என கூறப்படுகிறது.




