சமீபத்தில் இரண்டாமாண்டு துவக்க விழாவை பிரமாண்டமாக கொண்டாடியது த.வெ.க. இங்கு பூத் கமிட்டியை வலுவாக்க வேண்டும் என்பது உள்ளிட்டு பலவற்றை சுட்டிக்காட்டி பேசினார் அதன் தலைவர் விஜய். அவரின் உரை பேசுபொருளானது. இந்நிலையில் த.வெ.க-வின் அடுத்தடுத்த இலக்குகள், பயணம் குறித்தெல்லாம் அதன் கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகனை சந்தித்து கேள்விகளாக முன்வைத்தேன்.
“இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளீர். இருந்தும் உங்கள் தலைவரின் பேச்சில் ஆளும்கட்சிகளான பா.ஜ.க மற்றும் தி.மு.க மீது நேரடியான விமர்சனங்கள் இல்லையே…பூடகமாகவே பேசிக்கொண்டு இருக்கிறாரே…”
“உலக வரலாற்றிலேயே ஒரு கட்சியின் முதல் மாநாட்டிலேயே ‘எங்கள் கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக’ என அதிகாரத்தில் இருக்கும் கட்சிகளை அம்பலப்படுத்தி உருவான கட்சி எங்களுடையது.
பாஜக அஜெண்டா மதவாதம். எங்கள் அஜெண்டா பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்….
எனவே சமத்துவ கொள்கையோடு பயணத்தை தொடங்கினோம். தனி நபர்களை தாக்கும் அரசியலை எங்கள் தலைவர் விஜய்யிடம் எதிர்பார்க்க முடியாது. அவர் முன்வைப்பது டீப் அனலைசிஸ், டீசன்ட் பாலிடிக்ஸ். எங்களுக்கும் அதையே போதித்துள்ளார்.”
“மும்மொழி கொள்கை, தேசிய கல்விக் கொள்கையில் தமிழ்நாட்டுக்கான நிதியை கொடுக்க மறுத்துள்ளார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். இந்த விவகாரத்தில் ‘கொடுப்பது கடமை, பெறுவது உரிமை’ என்று அடுக்குமொழியில் பேசுகிறார் விஜய். கறாராக விமர்சிக்க மறுப்பதேன்? பா.ஜ.க-வை கண்டு பயமா?”
“பா.ஜ.க-வை பார்த்து அவர் என்னைக்குங்க பயந்திருக்காரு?! பணமதிப்பிழப்பு விவகாரத்தில் அன்றைக்கே நோக்கம் சரியாக இருந்தாலும் தாக்கம் தப்பா இருக்கு. இது சரியில்லை என்றவர். ‘ஜோசப் விஜய்’ என்று ஒரு புலனாய்வு புலி ஆராய்ச்சி செய்து ஆதார் கார்டு எடுத்து போட்ட போது, ‘ஆமா நான் ஜோசப் விஜய்’ தான் என்று லெட்டர் பேடில் பதிலடி கொடுத்தவர் எங்கள் விஜய்.
அதனால அதிகாரத்தை பார்த்தெல்லாம் பயப்படாதவர்ங்க. அவர் ஏன் ஒவ்வொரு மேடையிலும் பார்த்து பார்த்து வார்த்தைகளை கையாளுகிறார் என்றால் அவர் டீசன்ட் பாலிடிக்ஸின் மாஸ்டர்ங்க.
வசைமாரி பேசுவது, பச்சைபச்சையாக பேசுவதெல்லாம் எதிர்ப்பவர் அவர். அவரைப் பார்த்துதான் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பயம். “
“பாசிசம்-பாயசம் என்று ஒப்பிட்டு பேசுவது எல்லாம் எந்தவகையில் சரி ? இப்படி அடுக்குமொழியில் பேசி, பாசிசத்தின் வீரியத்தை குறைக்கிறீர்களா?”
“நாங்கள் நேரடியாகவே பாஜக நம் கொள்கை எதிரி என்று விமர்சித்து வருகிறோம். நாங்கள் அதிகாரத்தில் இல்லை ஆனால் எங்கள் அரசியல் எதிரியான திமுக , அதிகாரத்தில் உள்ளது. இத்தனை எம்.பி-க்கள் உள்ளனர்…ஆனால் தமிழ்நாட்டுக்காக அவர்கள் சாதித்தது என்ன? மேம்போக்கான எதிர்ப்பு மட்டுமே. உண்மையில் அவர்கள் தான் மறைமுக கூட்டு வைத்துள்ளனர். மொழி உள்ளிட்ட தமிழ்நாட்டின் எந்த உரிமையையும் சட்டமாக்க, யாராலும் தடுக்க முடியாதபடி சட்டப்படி வலு சேர்க்க எதையும் செய்யாத ஆட்சி தான் திமுக ஆட்சி. இந்த மண்ணுரிமைக்கான பயணத்தில் முக்கியமான ஒன்று ‘சாதிவாரி கணக்கெடுப்பு’ நடத்துவது. அதைக்கூட செய்யாத அரசு தான் திமுக அரசு. பாஜகவை எதிர்ப்பது போல கபடநாடகம் ஆடுவது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தான்.
எனவே தான் அவர்களை அதிகளவில் எக்ஸ்போஸ் செய்கிறோம். “
“தி.மு.க-வை எதிர்க்கும் அளவுக்கு அ.தி.மு.க-வை எதிர்ப்பதில்லையே . ஏன்? ஒரு சாப்ட் கார்னரோடு எடப்பாடி-யை அணுகுகிறாரா விஜய்? எதிர்காலத்தில் கூட்டணி சேர திட்டமா? அதனால் தான் மென்மையாக அ.தி.மு.க-வை அணுகுகிறீர்களோ?!”
(சிரிக்கிறார்) “எந்த சாப்ட் கார்னரும் இல்லை. ஆட்சியில் பங்கு என்பதில் உறுதியாக உள்ளோம். எங்கள் த.வெ.க தலைமையை ஏற்றுக்கொண்டு எந்த கட்சியும் கூட்டணியில் இணையலாம். அதேநேரம் இந்த நேர்காணல் மூலம் உறுதியாக சொல்கிறோம். அ.தி.மு.க-வுடன் நோ கூட்டணி.
1967-ல் பேரறிஞர் அண்ணா, மூதறிஞர் ராஜாஜியின் சுதந்திரா கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சிக்கு வந்தார். ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் அப்போதே முன்னாள் முதலைமைச்சராக இருந்தவர் ராஜாஜி. அண்ணாவோ, ஒருமுறை கூட வெற்றிபெறாதவராக இருந்தார்.
அந்த வரலாறு திரும்பும். 2026-ல் த.வெ.க தேசிய செய்தியாக இருக்கும். ,”
முழுபேட்டியை காண….
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
