தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய்யின் தவெகவை இணைக்க பாஜக முயல்வதாக கடந்த ஒரு வாரமாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார்.
அப்போது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருவாரா? பேச்சுவார்த்தை நடக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், ” இது பற்றி உங்களுக்கு தெரிந்த அளவுக்குக் கூட எனக்கு தெரியாது. கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராவதற்காகவே விஜய் டெல்லி செல்கிறார். விஜய் டெல்லி செல்வதற்கும், கூட்டணிக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
சிபிஐ மூலம் மிரட்டி விஜய்யை கூட்டணிக்கு வர வைப்பதாக எதிர்க்கட்சிகள் பொய் பேசுகின்றன. அவ்வளவு பேரும் பொய் தான் சொல்கிறார்கள்.
தமிழகத்தில் தினமும் கொலைகள் நடக்கிறது. நாங்குநேரி, சிவகங்கையில் கஞ்சா போதையில் வருவோர் போவோரை எல்லாம் வெட்டுகிறார்கள்.

இதை ஆளும்கட்சிதான் செய்கிறது. அதற்கு காரணம் கஞ்சாதானே. நான் நாட்டு மக்களுக்கு என்னென்ன நடக்கிறது என்று சொல்கிறேன்.
உங்களுக்கு ஒரே கவலை கூட்டணி இருக்கிறதா, இல்லையா? என்பதுதான். விஜய் கூட்டணிக்குள் வருகிறாரா? என்பது பற்றி என்னால் கருத்து சொல்ல முடியாது” என்று தெரிவித்திருக்கிறார்.




