அறிவொளி ஏற்ற வேண்டிய பள்ளிக்கூடமே, சட்டவிரோத மதுபானங்களைக் குவித்து வைக்கும் கிடங்காக மாறிய அவலம், பீகாரில் அரங்கேறியுள்ளது. அரசுப் பள்ளி ஒன்றில் 4ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவன் மது அருந்தி மயங்கி விழுந்த சம்பவம், மாநிலத்தின் மதுவிலக்கு அமலாக்கத்தின் லட்சணத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
பீகாரின் மோதிஹாரியில் கள்ளச்சாராயத்துக்கு 11 பேர் பலியான சோகத்தின் வடுக்கள் ஆறுவதற்குள், பெகுசராயில் நடந்தேறியுள்ள இந்த நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முழு மதுவிலக்கு அமலில் உள்ள ஒரு மாநிலத்தில், குழந்தைகளின் பாதுகாப்பு அரணாக விளங்க வேண்டிய பள்ளிக்கூட வளாகத்திலேயே மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது எப்படி? இந்தக் கேள்விதான் இன்று ஒவ்வொரு பெற்றோரையும் குடைந்து கொண்டிருக்கிறது.
சம்பவம் வெளிவந்தது எப்படி?
பள்ளியிலிருந்து வீடு திரும்பிய 4ஆம் வகுப்பு மாணவனின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரிந்தது. தள்ளாடிய நடை, மதுவின் நெடி! பதறிப்போன பெற்றோர், அவனது நண்பர்களிடம் விசாரித்தபோதுதான் அந்த நெஞ்சை உலுக்கும் உண்மை வெளிவந்துள்ளது. பள்ளியின் பூட்டப்பட்ட கழிவறை அருகே மதுபான பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
சிறிது நேரத்திலேயே அந்த மாணவனின் உடல்நிலை மோசமடைந்து, மயங்கி விழுந்துள்ளான். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது நலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலையடுத்து, கொதித்தெழுந்த பெற்றோரும், உள்ளூர் மக்களும் பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியரிடம் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து, பள்ளியில் உள்ள பாழடைந்த கழிவறைப் பகுதியைச் சோதனையிட்டபோது, அட்டைப்பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான மதுபானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
உடனடியாக பச்வாரா காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த கணிசமான அளவிலான வெளிநாட்டு மதுபானங்களைக் கைப்பற்றினர். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறுகையில், “பள்ளியில் மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது குறித்து எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை. மாணவனின் குடும்பத்தினர் கூறியதை அடுத்து, கைவிடப்பட்ட கழிவறையைச் சோதனையிட்டோம். அங்கே மதுபானப் பெட்டிகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக காவல்துறைக்குத் தகவல் அளித்தோம்,” என்றார்.

சுமார் 25 அட்டைப்பெட்டிகளில் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டதாக உள்ளூர் மக்கள் கூறினாலும், அதன் சரியான அளவைக் காவல்துறை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. பள்ளியை சட்டவிரோத மதுபானக் கிடங்காகப் பயன்படுத்திய கும்பல் யார் என்பது குறித்து தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய காவல் நிலைய அதிகாரி பரேந்திர குமார், “வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கடத்தல் நெட் வொர்க்கின் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார். முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் 2016ஆம் ஆண்டு முதல் கடுமையான மதுவிலக்குச் சட்டம் அமலில் உள்ள பீகாரில், குழந்தைகளின் கல்விக்கூடத்திற்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருப்பது, நிர்வாகத்தின் மீதான கடுமையான விமர்சனங்களையும், மக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




