மதுரையில் உள்ள மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேச இருக்கிறார்.
நாளை காலை புதுச்சேரியில் நடக்கும் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசி விட்டு, மதியம் தனி விமானம் மூலம் தஞ்சாவூர் விமானப் படைத்தளத்திற்கு வந்து அங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன் பின் மதியம் 3.30 மணியளவில் சிறப்பு விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார்.
மதுரைக்கு வரும் பிரதமர் மோடிக்கு பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வரவேற்பு அளிக்கின்றனர். அதனை தொடர்ந்து பிரதமர் மோடி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய வான் கட்டுப்பாட்டு கோபுரத்தை திறந்து வைக்கிறார். பின்னர் காணொலி காட்சி மூலம் தமிழகத்தில் புதுப்பிக்கப்பட்ட ரெயில் நிலையங்களை திறந்து வைக்கிறார்.
பரமக்குடி-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பின்னர் மாலை 4 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்கிறார். கோவில் நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு கும்பம் மரியாதை அளிக்கப்படுகிறது.
அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு 4.30 மணிக்கு மதுரை மண்டேலா நகர் சுற்றுச்சாலை பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் மாலை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி தலைமையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறர்கள்.
இதற்காக 120 ஏக்கர் இடத்தில் பிரமாண்டமாக செட் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பொதுக்கூட்ட அலங்கார முகப்பில் பெரியார், அண்ணா புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கிறது. பொதுக்கூட்ட மேடை மற்றும் முகப்பில் கூட்டணி கட்சி தலைவர்களின் புகைப்படங்களும் இந்த அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வரும் கட்சி தொண்டர்கள் அமரும் வகையில் ஒவ்வொரு தொகுதியும் தனிதனி கேபினாக பிரிக்கப்பட்டு சேர்கள் போடப்பட்டிருக்கின்றன. திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம் செய்ய இருப்பதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.




