நீலகிரி மாவட்டம் உதகை அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் பிரசித்திபெற்ற மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட இந்த பகுதியில், காடுகளில் வாழும் பழங்குடிகளின் காவல் தெய்வமாக பொக்காபுரம் மாரியம்மன் வழிபாடுநடைபெறுகிறது. நீலகிரி மட்டுமன்றி அருகில் அமைந்துள்ள கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வழிபட்டுச் செல்கின்றனர்.
இந்த கோயிலின் மிக முக்கிய விழாவான தேர் திருவிழாவில் பங்கேற்க மூன்று மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரள்வது வழக்கம். இந்தாண்டு தேர் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்றிரவு தேர் திருவிழா நடைபெற்றது. தேர் ஊர்வலத்தை காண நேற்று காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். பக்தர்களின் வருகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் முதல் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், முறையான குடிநீர் வசதி கூட செய்யவில்லை என பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தெரிவித்த கூடலூரைச் சேர்ந்த பக்தர்கள் சிலர், “கோயிலுக்குச் செல்வதற்கான முக்கிய வழித்தடமாக இருக்கிறது கூடலூர். ஆனால், கூடலூர் பேருந்து நிலையத்தில் எந்தவிதமான முன்னேற்பாடுகளும் செய்யவில்லை. இரவு நேரத்தில் பெண்கள் கூடும் பேருந்து நிலையத்தில் போதுமான வெளிச்சம் கூட இல்லை. போதிய அளவு அரசு பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், வரிசையில் நீண்ட நேரமாக காத்துக் கிடந்த பக்தர்களை மிரட்டி ஆட்டு மந்தைகளைப் போல கூட்டம் கூட்டமாக ஒரே பேருந்துக்குள் அடைத்து அனுப்பிகின்றனர் காவல்துறையினர். வாட்டும் வெயிலில் தாகம் தீர்க்க கோயில் வளாகத்தில் முறையான குடிநீர் வசதி கூட செய்யவில்லை.

கோயில் அருகில் மட்டுமே இரண்டு இடங்களில் குடிநீர் வைக்கப்பட்டிருந்தது. குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் நிலை தான் ஏற்பட்டது. இனி வரும் காலங்களிலாவது பக்தர்கள் தேவையறிந்து அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்” என்றனர்.

மக்களின் இந்த குற்றச்சாட்டு குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பேசுகையில், “வழக்கமான ஏற்பாடுகளை செய்திருந்தோம். ஆனால், இந்த ஆண்டு பக்தர்களின் வருகை சற்று அதிகமாகவே காணப்பட்டது. இதனால் சில குறைகள் ஏற்பட்டிருக்கலாம். இது போன்ற குறைகள் இனிவரும் காலங்களில் களையப்படும்” என முடித்துக் கொண்டனர்.